வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு... நொய்டா கார் ஆலையை மூடியது ஹோண்டா... 2 கார்களுக்கும் கல்தா!
கொரோனா பிரச்னையால் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், கிரேட்டர் நொய்டாவில் செயல்பட்டு வந்த கார் ஆலை மூடுவதாக ஹோண்டா கார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்திய சந்தையில் இருந்து இரண்டு கார் மாடல்களையும் விலக்கிக் கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா கார் நிறுவனம் மிக நீண்ட காலமாக இந்திய சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. கடந்த 1997ம் ஆண்டு முதல் இந்திய கார் சந்தையில் வர்த்தகத்தில் ஹோண்டா ஈடுபட்டுள்ளது.

மேலும், கிரேட்டர் நொய்டாவில் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஹோண்டா கார் ஆலை செயல்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் தபுகெரா என்ற இடத்தில் புதிய ஆலையை திறந்தது.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக புதிய கார் நிறுவனங்களின் வரவால் ஹோண்டா வர்த்தகம் இந்தியாவில் பெரும் பாதிப்படைந்தது. எதிர்பார்த்த அளவு விற்பனையில் வளர்ச்சியை எட்ட முடியவில்லை.

போதாக்குறைக்கு கொரோனா பிரச்னையும் சேர்ந்து கொண்டதால், நடப்பாண்டில் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வந்த ஹோண்டா கார் நிறுவனம் அதிரடியாக இந்திய வர்த்தகத்தை மறுசீரமைக்கும் முயற்சிகளில் இறங்கி இருக்கிறது.

இதன்படி, கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஆலையில் கார் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இங்கு சிவிக், சிஆர்வி மற்றும் புதிய தலைமுறை சிட்டி கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில், புதிய சிட்டி கார் உற்பத்தியை ராஜஸ்தானில் உள்ள தபுகெரா ஆலைக்கு மாற்றி உள்ள ஹோண்டா கார் நிறுவனம், சிவிக் மற்றும் சிஆர்வி கார்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது.

கிரேட்டர் நொய்டா ஆலையானது ஆண்டுக்கு 1 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறனை பெற்றிருந்தது. அதேநேரத்தில், தபுகெரா ஆலையில் ஆண்டுக்கு 1.8 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், பெரிய வகை கார்களை உற்பத்தி செய்ய இயலாது. இதற்கு கூடுதல் முதலீடு செய்ய ஹோண்டா விரும்பவில்லை.

எனவே, இந்திய சந்தையில் சிட்டி கார் மாடலுக்கு குறைவான விலை கொண்ட கார் சந்தையில் அதிக கவனம் செலுத்தவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கிரேட்டர் நொய்டாவில் கார் உற்பத்தி ஆலை மூடப்பட்டாலும், அதே பகுதியில் செயல்பட்டு வரும் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், உதிரிபாக கிடங்கு மற்றும் வினியோக பிரிவுகள் தொடர்ந்து செயல்படும் என்று ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








