போனியாகலை... ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!
பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் வந்துள்ளதையடுத்து, ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

கடந்த 2016ம் ஆண்டு ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வெளிநாடுகளில் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைத்தாலும், இந்தியாவில் 7 சீட்டர் மாடலில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. விற்பனையில் சோபிக்காத மொபிலியோ எம்பிவி காருக்கு மாற்றாக நிலைநிறுத்தப்பட்டது.

மொபிலியோ போன்றே இந்த காரும் விற்பனையில் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை. கடந்த ஆண்டு மொத்தமாகவே 2,857 கார்கள்தான் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த ரதத்தில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் தொடர்ந்து ஹோண்டா பட்டியலில் வைத்திருந்தது.

மாருதி எர்டிகா காரை குறிவைத்து நிறுத்தப்பட்ட இந்த எஸ்யூவி ரக காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல அலாய் வீல்கள், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

இந்த காரில் 119 பிஎஸ் பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 100 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும் வழங்கப்பட்டது. பெட்ரோல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும், டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்பட்டன.

பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 15.4 கிமீ மைலேஜையும், சிவிடி மாடல் லிட்டருக்கு 16 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 21.9 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், இந்த மாடலுக்கு போதிய வரவேற்பு இல்லை.

இந்த நிலையில், புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் காரணமாக, ஹோண்டா பிஆர்வி விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் பிஎஸ்6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தி மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்படுமா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.

அப்படி, பிஎஸ்6 தர எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டாலும், அந்த முதலீட்டுக்கு தக்கவாறு விற்பனை எண்ணிக்கை இருக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. எனவே, அதிகாரப்பூர்வ தகவல்வந்தால் மட்டுமே இந்த கார் புத்துயில் பெறுமா என்பது தெரிய வரும்.

ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி ரூ.9.52 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மாருதி எர்டிகா கார் மாடலைவிட விலை அதிகம் என்பதும் இதன் விற்பனை சோபிக்காமல் போனதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.


Click it and Unblock the Notifications








