முடங்கிய ஆட்டோமொபைல் துறை.. ஆன்லைன் யுக்தியை கையில் எடுக்கும் ஹோண்டா கார்ஸ்..
'ஹோண்டா ஃப்ரம் ஹோம்' என்ற பெயரில் ஆன்லைன் முன்பதிவு தளத்தை ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

தற்சமயம் நாடு உள்ள நிலையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிப்பது முடியாத காரியமாக உள்ளது. இதுவே இப்படியுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் ஷோரூமிற்கு சென்று பிடித்தமான கார்களை வாங்குவது என்பது நிச்சயம் சாத்தியமற்ற ஒன்றே.

ஏனெனில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஷோரூம்கள் அனைத்தும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. கார்களை விற்கும் ஷோரூம்கள் மட்டுமின்றி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது தொழிற்சாலைகளை ஏற்கனவே தற்காலிகமாக மூடிவிட்டன.

இருப்பினும் ஸ்டாக்கில் உள்ள வாகனங்களை விற்க தயாரிப்பு நிறுவனங்கள் வித்தியாச வித்தியாசமான முயற்சிகளில் இறங்கியுள்ளன. இதில் ஒன்று ஆன்லைன் முன்பதிவு. இந்த வசதியில் கார்களை வாடிக்கையாளர்கள் இணையத்தில் பார்த்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அவர்கள் தேர்ந்தெடுக்கும் கார்கள் லாக்டவுன் முடிவுக்கு வந்த பின் டெலிவிரி செய்யப்படவுள்ளன. இந்த வசதியை பெரும்பான்மையான அனைத்து நிறுவனங்களுக்கும் நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்ட நிலையில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்த யுக்தியை தற்போது கையில் எடுத்துள்ளது.

இதற்கு ஹோண்டா ஃப்ரம் ஹோம் என பெயர் வைத்துள்ள இந்நிறுவனத்தின் மாடல்களை டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு செல்லாமலேயே சொந்தமாக்க முடியும். தற்சமயம் சில கார்களுடன் காட்சியளிக்கின்ற ஹோண்டாவின் இந்த முன்பதிவு தளத்தில் இன்னும் சில நாட்களில் புதிய சிட்டி மாடலுடன் பிஎஸ்6 ஜாஸ் மற்றும் டபிள்யூஆர்-வி போன்ற மாடல்களும் இணையவுள்ளன.

ஹோண்டாவின் இந்த புதிய முன்பதிவு தளத்தை நாடும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான கார்களை தேர்ந்தெடுப்பது மட்டுமில்லாமல், டெலிவிரி செய்ய தங்களுக்கு விருப்பமான டீலர்ஷிப்களையும் தேர்ந்தெடுக்கலாம். மேலும் கார் முன்பதிவுகளை இந்தியாவில் எந்தவொரு இடத்தில் இருந்தும் மேற்கொள்ள இயலும்.

ஹோண்டா இந்தியா நிறுவனத்தின் அனைத்து டீலர்ஷிப்களையும் ஒருங்கிணைக்க உள்ள இந்த முன்பதிவு தளத்தில் கார்களை முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் முதலில் ஹோண்டா கார்ஸின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தை அணுகி, அதில் Book now தேர்வை க்ளிக் செய்ய வேண்டும்.

அதில் தங்களது விபரங்களை பதிவு செய்தபின், அதில் வேரியண்ட், ட்ரான்ஸ்மிஷன் மற்றும் நிறங்களின் அடிப்படையில் தனித்தனியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் கார்களில் விருப்பமானதை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் வாடிக்கையாளர்கள் தங்களது நகரத்தையும் டீலர்ஷிப்பையும் தேர்வு செய்ய வேண்டும்.

வாடிக்கையாளரின் விபரங்கள் ஆராயப்பட்ட பின், கட்டண நுழைவாயிலில் தங்களது கட்டண தேர்வையும், முன்பதிவு ஆன்லைன் தேர்வையும் தேர்ந்தெடுக்கலாம். முன்பதிவு உறுதியானதை குறிக்கும் விதமான ஐடி வாடிக்கையாளருக்கு குறுந்தகவல் மூலமாகவோ அல்லது இமெயில் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும்.

வாடிக்கையாளருக்கு ஐடி எண் அனுப்பி வைக்கப்படும் அதேநேரம் சம்மந்தப்பட்ட டீலருக்கும் வாடிக்கையாளர் பற்றிய விபரங்கள் சென்றடைந்திருக்கும். இந்த செயல்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்த பின் வாடிக்கையாளரின் ஆவணங்கள் மற்றும் கட்டண தேர்வுகளை சரிபார்க்க தேர்வு செய்யப்பட்ட டீலர்ஷிப்பின் விற்பனை நிர்வாகி இந்த முன்பதிவு செயல்முறையில் இணைவார்.

இந்த வழக்கமான செயல்முறைகள் அனைத்தும் சுமூகமான முடிந்த பின், ஏற்கனவே கூறியதுபோல், வாடிக்கையாளர்களுக்கு அவர் தேர்வு செய்த கார் டெலிவிரி செய்யப்படும் தேதி தெரிவிக்கப்படும். கொரோனாவினால் ஆட்டோமொபைல் துறை முழுவதும் முடங்கியுள்ள நிலையில் தயாரிப்பு நிறுவனங்களின் இத்தகைய ஆன்லைன் முன்பதிவு நடவடிக்கைகள் நிச்சயம் பயனளிக்கும் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications








