பிஎஸ்6 எஃபெக்ட்... ஹோண்டா சிட்டி, சிவிக் கார்களில் டீசல் எஞ்சின் விற்பனை நிறுத்தம்!
பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஹோண்டா நிறுவனத்தின் சில கார் மாடல்களில் டீசல் எஞ்சின் மாடலின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் பட்ஜெட் டீசல் கார் சந்தையில் ஹோண்டா நிறுவனம் முக்கிய போட்டியாளராக உள்ளது. அந்நிறுவனத்தின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தனது 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட கார் மாடல்களின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட சிட்டி, டபிள்யூஆர்வி, பிஆர்வி ஆகிய கார்கள் விலக்கப்பபட்டுவிட்டன. ஆனால், இந்த எஞ்சின் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுவிட்டது.

ஹோண்டா அமேஸ் காரில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் ஜனவரி மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், டபிள்யூஆர்வி மற்றும் ஜாஸ் கார்களில் இந்த எஞ்சின் தேர்வுடன் விரைவில் வர இருக்கிறது.

அடுத்து சிட்டி காரிலும் இந்த எஞ்சின் தேர்வு வழங்கப்படும். பெரும்பாலான ஹோண்டா கார்களில் இடம்பெற்றிருக்கும் இந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 98 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஒரே எஞ்சின் ஓஹோன்னு வாழ்க்கை என்ற ரீதியில் இந்த டீசல் எஞ்சின் ஹோண்டா கார் நிறுவனத்தின் வர்த்தகத்தில் மிக முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. எனவே, விரைவில் பிற கார் மாடல்களிலும் இந்த டீசல் எஞ்சின் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதியாக கூறலாம்.

இதேபோன்று, ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி மற்றும் சிவிக் செடான் கார்களின் டீசல் மாடலின் விற்பனையும் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 1.6 லிட்டர் ஐ-டிடெக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனையில் இருந்தது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருந்தது. இந்த நிலையில், இந்த எஞ்சின் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட மாட்டாது என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








