இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவையே மிரள வைத்த முதியவர்... இவர்தான் வெளிநாட்டு செல்லூர் விஞ்ஞானி!
வெளிநாட்டு முதியவர் ஒருவர் தனது மின்சார காரை சார்ஜ் செய்ய புதுமையான யுக்தி ஒன்றை கையாண்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, தொழில் முனைவதில் மட்டுமின்றி சமூக வலை தளங்களிலும் மிகவும் துடிப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கின்றார். இவரின் பார்வையில் வாகனம் சார்ந்த வித்தியாசமான வீடியோ படுமேயானால், அதுகுறித்த விமர்சனத்தை முன் வைப்பதில் தவறுவதில்லை.

அந்தவகையில், இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் ஓர் வீடியோவைதான், தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் தற்போது பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சற்று வயாதன ஓர் நபர் தனது டெஸ்லா மின்சார காருக்கு ஜெனரேட்டர் மூலம் சார்ஜ் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

வில்லேஜ் விஞ்ஞானி என பாராட்டக்கூடிய வகையில் அந்த நபர் செய்திருக்கும் காரியம்தான் தற்போது சமூக வலை தளங்களில் மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. ஆனந்த் மஹிந்திராவின் நகைச்சுவையான கமெண்டினால் அது மேலும் கூடுதலாக இந்தியாவில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் இந்தியாவில்கூட இதுபோன்ற ஓர் சம்பவம் அரங்கேறியிருந்தது. இந்த சம்பவத்தில், எலெக்ட்ரிக் பேருந்தை சார்ஜ் செய்ய ஜெனரேட்டர் லாரி வரவழைத்து மின்னேற்றம் செய்யப்பட்டது (இதுகுறித்த தகவலை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்). இந்தியர்களின் இந்த யுக்தியைக் கையாளும் விதமாக அந்த வெளிநாட்டவர், டீசலைக் கொண்டு மின்திறனை வழங்கும் சிறிய ரக ஹோண்டா ஜெனரேட்டரை வைத்து டெஸ்லா மின்சார காரை சார்ஜ் செய்துள்ளார்.
இந்த சம்பவம் அனேகர் மத்தியில் நகைப்பலையை ஏற்படுத்தியிருந்தாலும், வாகன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், மின்சார வாகனங்கள் சுற்றுச் சுழலுக்கு நண்பனாக விளங்கும் என்கிற காரணத்திற்காகவே, எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக அவை ஆதரிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இந்த நோக்கத்தை சீர்குலைக்கும் விதமாக டீசலால் இயங்கும் ஜெனரேட்டரை வைத்து அது சார்ஜ் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு போதிய கட்டமைப்பு (சார்ஜிங் நிலையம்) வசதி இல்லாததே முக்கிய காரணமாக உள்ளது. ஆம், இந்தியா உட்பட பல நாடுகளில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் அதி-தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால் அந்த முயற்சிகள் இன்னும் முழுமையாக பயன்பாட்டிற்கு வராததையே இந்த சம்பவம் வெளிக்காட்டுகின்றது. அதேசமயம், இந்தியாவைக் காட்டிலும் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் பல மடங்கு வேகத்தில் உலக நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய சம்பவத்தில் டெஸ்லா காரின் உரிமையாளர், தனது காரை சார்ஜ் செய்ய மறந்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

மேலும், இதுபோன்ற நேரங்களைக் கையாள்வதற்காகவே எப்போதும் தனது காரில் ஹோண்டா ஜெனரேட்டரை தயார் நிலையில் வைத்து வந்திருக்கின்றார். இந்த விநோதமான சம்பவத்தைக் கண்ட சக பயணி ஒருவரே, தனது செல்போனில் படம் பிடித்து அதை வைரலாக்கியுள்ளார். டெஸ்லா மின்சார காரை இதற்குமுன்பு இதுபோன்று ஜெனரேட்டரில் சார்ஜ் செய்த சம்பவத்தை தன் வாழ்நாளிலேயே பார்த்தது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக, சார்ஜ் நிலையம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததே மின்சார வாகனங்களின் விற்பனை குழந்தை பருவத்தில் இருக்க முக்கிய காரணமாக உள்ளது. ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகிகூட இந்த குறைபாட்டின் காரணமாகவே அதன் மின்சார காரை களமிறக்க தயக்கம் காட்டி வருகின்றது.

ஏன் உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் டெஸ்லா நிறுவனம்கூட இந்தியாவில் அதன் மின்சார காரை களமிறக்க முடியாமல் திணறி வருகின்றது. இதற்கு போதிய கட்டமைப்பு இல்லாதது மற்றும் இந்திய சாலை அக்காரின் நவீன தொழில்நுட்ப ஏதுவானதாக இல்லாததும் ஓர் காரணம் ஆகும்.

இருப்பினும், இணையத்தில் வெளியாகும் தகவல் அனைத்தும், விரைவில் டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் களமிறக்கப்படும் என கூறியபடி இருக்கின்றன. அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத இந்த தகவல் டெஸ்லா மின்சா கார் பிரியர்கள் மத்தியில் ஆவலைத் தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








