நொய்டா ஆலையில் கார் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தியது ஹோண்டா!
டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் உள்ள தொழிற்சாலையில் கார் உற்பத்தியை ஹோண்டா நிறுவனம் முற்றிலுமாக நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஹோண்டா இந்தியா கார் நிறுவனத்திற்கு டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவிலும் (உத்தரபிரதேசம்), தபுகெராவிலும் (ராஜஸ்தான்) இரண்டு இடங்களில் கார் ஆலைகள் உள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த அளவு அமையவில்லை.

இந்திய கார் சந்தையில் மூன்றாவது பெரிய கார் நிறுவனமாக இருந்த ஹோண்டா தற்போது 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது. மேலும், சந்தையில் ஹோண்டா கார் நிறுவனத்தின் பங்களிப்பு 3 சதவீதமாக மட்டுமே இருந்து வருகிறது.

இதனால், இந்திய கார் வர்த்தகத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஹோண்டா மேற்கொண்டுள்ளது. அதன்படி, கிரேட்டர் நொய்டா ஆலையில் கார் உற்பத்திப் பணிகளை ஹோண்டா முற்றிலுமாக நிறுத்த முடிவு செய்ததுள்ளதாக கடந்த ஆண்டு செய்தி வெளியானது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த நவம்பர் மாதத்துடன் கிரேட்டர் நொய்டா ஆலையில் கார் உற்பத்திப் பணிகளை ஹோண்டா முற்றிலுமாக நிறுத்தி விட்டதாக எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் கிரேட்டர் நொய்டா கார் ஆலையில் ஒரு கார் கூட உற்பத்தி செய்யப்படவில்லை.

கிரேட்டர் நொய்டா ஆலையில் சிட்டி, சிவிக் மற்றும் சிஆர்வி கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இந்த கார்களின் உற்பத்திப் பணிகள் தற்போது ராஜஸ்தான் மாநிலம் தபுகெரா ஆலைக்கு மாற்றப்பட்டுள்ளதாம். இதன்மூலமாக கார் உற்பத்தியில் ஏற்படும் செலவீனங்களை வெகுவாக கட்டுப்படுத்த முடியும் என்று ஹோண்டா கார் நிறுவனம் கருதுகிறது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்த ஹோண்டா கார் செயல்பட்டு வந்தது. கிரேட்டர் நொய்டா நகரில் தற்போது குடியிருப்பு பகுதிகளுடன் வெகுவாக விரிவடைந்துள்ளதால், அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், இங்கு கார் உற்பத்திக்கான மூலப்பொருட்கள், உதிரிபாகங்களை எடுத்து வரும் வாகனங்கள், கார்களை டீலர்களுக்கு எடுத்துச் செல்லும் ட்ரெயிலர் ரக வாகனங்கள் சென்று வருவதில் கடும் சிரமம் ஏற்படுகிறது.

கிரேட்டர் நொய்டா ஆலையில் கார் உற்பத்தியை நிறுத்த ஹோண்டா முடிவு செய்ததற்கு, இதுவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், ஹோண்டா நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தொடர்ந்து கிரேட்டர் நொய்டாவில் செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தபுகெரா ஆலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது. இந்த ஆலையில் ஆண்டுக்கு 1.80 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா கார் நிறுவனம் கடந்த 1997ம் ஆண்டு இந்திய சந்தையில் கார் வர்த்தகத்தை துவங்கியது. முதலில் ஸ்ரீராம் குழுமத்தின் கீழ் செயல்படும் உஷா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கூட்டணியில் கார் வர்த்தகம் செய்தது. ஹோண்டா சியல் கார்ஸ் இந்தியா என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. கடந்த 2012ம் ஆண்டு முதல் ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடேட் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








