ஹோண்டாவின் முதல் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்... 2021ல் இந்தியாவில் அறிமுகம்..!
ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா அடுத்த 2021ஆம் ஆண்டு மே மாதத்தில் காம்பெக்ட் எஸ்யூவி மாடல் ஒன்றை முதன்முறையாக சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ மாடல்களின் தோற்றத்தில் வெளியாகும் புதிய ஹோண்டா எஸ்யூவி மாடலை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

இந்திய சந்தையில் காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களுக்கு எப்போதும் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. இதனை மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ மாடல்கள் மிகவும் சரியாக பயன்படுத்தி வருகின்றன.
மற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்டவை கணிசமான விற்பனை எண்ணிக்கையை பெற்று வருகின்றன. ஏனெனில் காம்பெக்ட் எஸ்யூவி மாடல்கள், சிறந்த கலவையில் எஸ்யூவி கார்களுக்கான பண்புகளையும் பெற்றுள்ளது.

இதனால் சந்தையில் பிரபலமாக உள்ள பெரும்பாலான மாடல்கள் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் ஒரு காரையாவது அறிமுகப்படுத்தியுள்ளன அல்லது மிக விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. இந்த வகையில் கியா மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் மட்டும் தான் காம்பெக்ட் எஸ்யூவியை இந்தியாவில் இதுவரை அறிமுகப்படுத்தவில்லை.

கியா நிறுவனத்தில் சப்-4 மீட்டர் எஸ்யூவி இந்த வருட ஆகஸ்ட் மாதத்தில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஹோண்டா நிறுவனம் தனது முதல் காம்பெக்ட் எஸ்யூவி மாடலை அடுத்த வருட மே மாதத்தில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது.
அதேநேரம் இந்த புதிய ஹோண்டா சப்-4 மீட்டர் எஸ்யூவி காரின் இந்திய அறிமுகம் உலகளாவிய அறிமுகத்திற்கு சில மாதங்கள் கழித்து இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக ஹோண்டா நிறுவனத்தில் இருந்து அறிமுகமான டபிள்யூஆர்-வி மாடல் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் தான் நிலைநிறுத்தப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சப்காம்பெக்ட் க்ராஸ்ஓவராக சந்தைப்படுத்தப்பட்டது. எப்படியிருந்தாலும் அடுத்த ஆண்டில் ஹோண்டா நிறுவனத்தில் இருந்து காம்பெக்ட் எஸ்யூவி கார் ஒன்று விற்பனைக்கு வந்துவிடும். இந்தியா மட்டுமின்றி சில வெளிநாட்டு சந்தைகளிலும் புதிய ஹோண்டா சப்-4 மீட்டர் எஸ்யூவி மாடல் விற்பனை செய்யப்படவுள்ளது.

ஹோண்டா அமேஸ் காம்பெக்ட் செடானின் ப்ளாட்ஃபாரத்தில் இந்த காம்பெக்ட் எஸ்யூவி மாடல் தயாரிக்கப்படவுள்ளது. இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், அமேஸின் கட்டமைப்பு எடை குறைவாகவும், தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றக்கூடியதாகவும் உள்ளதால் புதிய ஹோண்டா காம்பெக்ட் எஸ்யூவி காரை வித்தியாசமான உடற் அமைப்பில் எதிர்பார்க்கலாம்.
மேலும் இந்த புதிய ஹோண்டா மாடல் க்ரோம் நிறைந்த க்ரில் மற்றும் முழு-எல்இடி தரத்தில் முன்புற மற்றும் பின்புற விளக்குக்களை பெற்றிருக்கும். இந்த புதிய மாடலில் சில டிசைன் அமைப்புகள் சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஜாஸ் மாடலின் அடுத்த தலைமுறை காரை ஒத்திருக்கும் என கூறப்படுகிறது.

வெளிநாட்டு சந்தைகளில் விற்பனைக்கு செல்லவுள்ள இந்த ஹோண்டா காம்பெக்ட் எஸ்யூவி மாடலில் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஹைப்ரீட் பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படலாம். இதன் இந்திய அறிமுக மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் தேர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 2021 மாடலில் ஹோண்டா நிறுவனத்திற்கே உரிய எலக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் மற்றும் பெரிய திரையுடன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை பொருத்தப்படவுள்ளன.


Click it and Unblock the Notifications








