இது இருந்தால் கொரோனா க்ளோஸ்... வைரஸ் - பாக்டீரியவை தேடி தேடி அழிக்கும் ரோபோ
வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை தேடி தேடி அழிக்கின்ற ரோபோ எந்திரங்கள் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஒட்டுமொத்த மனித இனத்திற்கே பேராபத்தை விளைவிக்கும் வகையில் பரவி வருகின்றது ஒற்றை உயிர் கொல்லி வைரஸ் கொரோனா. இதன் பிடியில் இருந்து தற்காத்துக் கொள்வது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கின்றது. இதைச் செய்ய தவறியதன் காரணத்தினாலயே உலக நாடுகள் பலவற்றில் மக்கள் எண்ணற்ற துயரத்தைச் சந்தித்து வருகின்றனர்.

அதேசமயம், வைரஸ் பரவலின் ஆரம்ப காலத்திலேயே துரித நடவடிக்கையை மேற்கொண்ட நாடுகள் சில, வைரசை வெற்றி பெற விடாமல், வீரியமற்றதாக மாற்றியிருக்கின்றன.
இம்மாதிரியான ஓர் நடவடிக்கையில்தான் தற்போது ஹாங்காங் விமான நிலையம் களமிறங்கியுள்ளது.

உலகையே கோர பிடியால் வாட்டி வதைத்து வரும் கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் சீனாவின் வுஹான் நகரத்தில் மட்டுமே காணப்பட்டது. ஆனால், தற்போது அது உலகம் முழுவதிலும் பரவிக் காணப்படுகின்றது. இந்த அதீத பரவலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக விமானங்கள் இருக்கின்றன.

முன்பெல்லாம் வைரஸ், பாக்டீரியா அல்லது கிருமிகள் போன்ற ஏதேனும் கிருமி தொற்று ஏற்பட்டால், குறிப்பிட்ட சமூகத்திற்கு இடையே மட்டுமே பரவும். ஆனால், இப்போது கண்டம் கண்டம் விட்டு பரவியிருக்கின்றது கொரோனா. இதற்கு மறைமுகமாக உதவியிருக்கின்றது விமானந போக்குவரத்து.

பல மடங்கு வளர்ச்சியடைந்த தற்போதைய எந்திர காலத்தில் மனிதன் மணிப் பொழுதில் நாடு விட்டு செல்கின்றான். இந்த அதீத வளர்ச்சியே கொரோனா வைரஸ் பரவலுக்கும் வழி வகுத்துள்ளது.
இந்த நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, ஹாங்காங் விமான நிலையத்தில் தானியங்கி கிருமி நாசினி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இது, வெளிநாடுகளில் இருந்து வரும் மக்களை முழுமையாக ஆய்வு செய்து, அவர்கள் மீது படர்ந்திருக்கும் நோய் கிருமிகளை அழிக்க உதவும். குறிப்பிட்டு கூற வேண்டுமானால், இதனை கெமிக்கல் குளியல் என்றே கூறலாம். ஆம், நாம் வாகனங்களை மருந்து கொண்டு சுத்தம் செய்வதைப் போலவே இந்த ரோபோ எந்திரம் மனிதர்களை கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்யும்.

வெறும் 40 செகண்டுகளிலேயே இது மனிதர்களை தூய்மைப்படுத்திவிடும். எனவே, வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் என்ற அவலநிலை ஏற்படாது.
தற்போது, வைரஸ் பரவல் அதிகமாக இருக்கின்ற காரணத்தால் கணிசமான அளவில் இந்த கிருமி நாசினி கருவிகளை நிலை நிறுத்த ஹாங்காங் விமான நிலைய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

டெலிஃபோன் பூத் போன்ற உருவத்தை இந்த கிருமி நாசினி எந்திரம் கொண்டிருப்பதால் அதனை நிறுவுவது அவ்வளவு கடினமானதாக இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தற்போதைய சூழ்நிலையில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதால், இம்மாதிரியான அதிரடி நடவடிக்கை எடுப்பது கட்டாயமானதாக மாறியிருக்கின்றது.

இந்த எந்திரத்தின் உட்புற பகுதியில் இருக்கும் ஆண்டி-மைக்ரோபியல் பூச்சு, தானாக இயங்கி, வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் போன்றவற்றை அழிக்கும். குறிப்பாக, போட்டேகேட்டலிஸ்ட் மற்றும் நானோ-நீடில்ஸ் தொழில்நுட்பங்களைக் கொண்டு இவை மனிதனின் உடல் மற்றும் ஆடைகளில் ஒட்டியிருக்கும் கிருமிகளை அழிக்கும்.

இம்மாதிரியான வசதியை விமான நிலையங்களில் கொண்டு வருவது உலகிலேயே இதுவே முதல் முறையாகும்.
எனவே, ஹாங்காங் விமான நிலையத்தின் மீது உலக நாடுகள் பலவற்றின் பார்வை திரும்பியிருக்கின்றது. முக்கியமாக இந்த எந்திரங்களைக் கொண்டு பயணிகளின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கே கிருமி நாசினி செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏனெனில், பணியாளர்களே பாதுகாப்பு கவசங்கள் அணிந்தும் வெளிப்புறத்தில் தொற்றியிருக்கும் வைரஸ்களால் அதிகம் பாதிப்படைகின்றனர்.
ஆகையால், பணியாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. எனவே, பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த நவீன கிருமி நாசினி எந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

இந்த எந்திரத்தின் உட்பகுதி கடிகாரத்தைப் போல் சுழன்று சுழன்று இயங்கும் தன்மைக் கொண்டிருக்கின்றது. எனவே, 99.99 சதவீதம் நிச்சயம் கிருமிகளைக் கொள்ளும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அல்ட்ராவைலட் மின் விளக்கு மற்றம் காற்றை சுத்திகரிக்கும் திறன் உள்ளிட்டவை இந்த ரோபோ கிருமி நாசினி எந்திரத்தில் இடம்பெற்றிருப்பது பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.


Click it and Unblock the Notifications








