தீவிரம் காட்டும் டெல்லி! அந்த கடைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்... என்னனு தெரியுமா?
நம்பர் பிளேட் விவகாரத்தில் டெல்லி அரசு தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.

டெல்லி அரசாங்கம் செவ்வாய் கிழமை (22 செப்டம்பர்) அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், ஏப்ரல் 2019ம் ஆண்டிற்கு முன்னர் வாங்கப்பட்ட அனைத்து வாகனங்களிலும் புதிய பதிவெண் விதி கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என அது கூறியிருந்தது.

அதாவது, உயர் பாதுகாப்பு பதிவு தகடுகள் மற்றும் நிற குறியீட்டை வாகனங்கள் கட்டாயம் பொருத்தியிருக்க வேண்டும் என கூறியிருந்தது. எந்தவொரு கால தாமதமும் இல்லாமல் அனைத்து வாகனங்களும் இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என டெல்லி அரசின் போக்குவரத்து துறை கூறியுள்ளது. இதனால் மக்கள் புதிய நம்பர் பிளேட் வழங்கும் நிறுவனங்களை நோக்கி நகர தொடங்கியுள்ளனர்.

எச்எஸ்ஆர்பி என்பது குரோமியம் ஹோலோகிராம் அடிப்படையிலான நம்பர் பிளேட் ஆகும். இது ரிவிட் முறை மூலமாக வாகனங்களில் பொருத்தப்படும். ஆகையால், இதனை எளிதில் கழட்டி மாட்ட முடியாது. போலி பதிவெண் முறைகேட்டைத் தடுக்கும் விதமாக எச்எஸ்ஆர்பி நம்பர் பிளேட் விவகாரத்தில் இந்திய அரசு தீவிரம் காட்டி வருகின்றது.

இதனடிப்படையிலேயே டெல்லி அரசாங்கமும் இதனை உடனடியாக பொருத்தும்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்துடன், எரிபொருள் அடிப்படையில் அந்த நம்பர் பிளேட் நிறத்தால் குறிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அது அறிவுறுத்தியுள்ளது. அதாவது, லேசான நீள நிற நம்பர் பிளேட் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வாகனங்களுக்கும், ஆரஞ்சு நிற நம்பர் பிளேட் டீசல் வாகனத்திற்கும், பச்சை நிற பதிவெண் மின்சார வாகனத்திற்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்த புதிய உத்தரவுகளைதான் டெல்லி அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, டெல்லியில் பதிவு செய்யும் அனைத்து வாகனங்களுக்கும் இந்த புதிய உத்தரவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டம் 1988 மற்றும் மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989ம் ஆகிய பிரிவுகளின்கீழ் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்லது.

அனைத்து மாநிலங்களும் புதிய உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தநிலையில், ஒவ்வொரு மாநிலங்களும் இதை நடைமுறைப்படுத்த தயாராகி வருகின்றன. அந்தவகையிலேயே டெல்லி அரசு இந்த விவகாரத்தில் தற்போது தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.

"டெல்லியில் 30 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் புதிய எச்எஸ்ஆர்பி மற்றும் நிற ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டியிருக்கின்றது" என டெல்லி அரசின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 236 விற்பனையாளர்கள் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளனர்.

வாகனங்கள் அரங்கேறும் முறைகேடுகள் மற்றும் சட்ட விரோத செயல்களுக்கு தீர்வு கட்டும் விதமாக மத்திய அரசு புதிய உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் போலி பதிவெண் மட்டுமின்றி வாகனம் சார்ந்த அரங்கேறும் பிற சட்ட விரோத செயல்களை முற்றிலுமாக தடுக்க முடியும். குறிப்பாக, வாகன திருட்டு, கடத்தல் மற்றும் கொள்ளைப் போன்ற சம்பவங்கள் முற்றிலுமாக தடுக்க முடியும் என நம்பப்படுகின்றது.

உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பற்றிய சிறப்பு தகவல்:
எலக்ட்ரானிக் நம்பர் பிளேட்டான இது அலுமினியத் தகட்டால் உருவாக்கப்படுகிறது. அதில், அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்ட குரோமியம் ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டப்படும். இதை கிழிக்க முடியாது. அதற்கு கீழே 'ஐஎன்டி' என நம் நாட்டின் அடையாளத்தைக் குறிக்கும் விதமாக, நீல நிறத்தில் ஆங்கில வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும்.

இந்த ஆங்கில வார்த்தைக்கு கீழே அல்லது பக்காவட்டில், ஒவ்வொரு பலகைக்கும் பிரத்யேக பதிவெண்கள் ஸ்டிக்கராக அல்லாமல் அழுத்தமாக அச்சிடப்படும். இந்த எழுத்தினை அழித்தாலும், அதன் பின்னணியில் உள்ள அச்சு அப்படியே இருக்கும். பின்னர், மத்திய அரசின் 'வாஹன்' என்ற இணையதளத்தில், குறிப்பிடப்பட்ட வாகனத்தின் உரிமையாளர், பதிவு எண்கள், பிரத்யேக எண்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் பதிவு செய்யப்படும்.

இந்த நம்பர் பிளேட்டானது ரிவிட் முறை மூலம் வாகனங்களில் பொருத்தப்படும். இதனால், வாகனத்தில் பொருத்தப்பட்ட நம்பர் பிளேட்டை அகற்றவோ அல்லது போலி நம்பர் பிளேட்டுகளை பொருத்தவோ முடியாது. ஆகையால், போலி நம்பர் பிளேட்டை பயன்படுத்தி அரங்கேறும் குற்றச் சம்பவங்கள் இதன்மூலம் தவிர்க்கப்படும். இந்த புதிய முறையின் மூலம், போக்குவரத்து விதிமீறல்களும் கணிசமாக குறையும். இதேபோன்று, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே இந்த உயர் பாதுகாப்புக் கொண்ட வாகன பதிவு எண் பலகைகளை தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








