விலையுயர்ந்த லம்போர்கினி - ஆடி ஆர்8 சூப்பர் கார்கள் பறிமுதல்.. காரணத்தை கேட்டு ஷாக் ஆயிடாதீங்க..!
பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி ஹூராகேன் மற்றும் ஆடி நிறுவனத்தின் ஆர் 8 காரை போலீஸார் விரட்டிச் சென்று பறிமுதல் செய்துள்ளனர். இதற்கான காரணத்தை விரிவாக இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவின் ஒரு சில சாலைகளில் மட்டுமே விலையுயர்ந்த கார்கள் மற்றும் பைக்குகளின் நடமாட்டத்தை நம்மால் காண முடிகின்றது. அரிதினும் அரிதாக காட்சியளிக்கும் அந்த வாகனங்கள் பல நேரங்களில் சாலையில் சீறிப் பாய்ந்த வண்ணத்திலே நமது கண்களில் புலப்படுகின்றன.

அப்போது, அந்த கார் என்ன பிராண்ட் என்பதை கூட நம்மால் அறிய முடிவதில்லை. இத்தைகய வேகத்திற்கு இந்தியாவில் அனுமதி உள்ளதா என கேட்டால், அதற்கு எங்களின் பதில் "இல்லை" என்பதே ஆகும்.
குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இந்தியாவில் விற்பனையாகும் பல உயர் திறன் கொண்ட வாகனங்களின் உச்சபட்ச வேகம் தடை செய்யப்பட்ட வேகமாகவே காட்சியளிக்கின்றன.

இருப்பினும், அதிக திறன்கொண்ட கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் அதனை அவ்வப்போது பொது சாலையில் வைத்து அதி வேகத்தில் இயக்கியோ அல்லது சோதனையிட்டோ வருகின்றனர். இந்தவகையிலான ஓர் சம்பவம்தான் தெலங்கானா மாநிலம் ஹைதாராபாத்தில் அரங்கேறியிருக்கின்றது.

இந்த சம்பவத்தில் இரு அதிகபட்ச விலைகொண்ட கார்களாக கருதப்படும் லம்போர்கினி ஹூராகேன் மற்றும் ஆடி ஆர்8 கார்கள் ரேஸில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இதன்காரணமாகவே, போலீஸார் விரட்டிச் சென்று இரு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுபோன்று பொதுசாலையில் வைத்து கார்களை அனுமதித்த வேகத்தைக் காட்டிலும் அதிவேகத்தில் இயக்குவது மற்றும் ரேஸிங் செய்வது மோட்டார் வாகன சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆனால், இதனை பெரும்பாலான சக்திவாய்ந்த வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் கடைப்பிடிப்பதே இல்லை. குறிப்பாக வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் அவர்கள் ரேஸ் மற்றும் வேக சோதனையில் ஈடுபடுகின்றனர்.
இதற்காக, ரேஸிங் டிராக்குகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் அதனை உபயோகப்படுத்தாமல் பொது சாலைகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

அந்தவகையிலேயே ஹைதராபாத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் ராஜேந்திர நகர் பகுதியில் ரேஸிங்கில் ஈடுபடும்போது போலீஸாரிடம் சிக்கினர். இவ்விருவரும் நீண்ட நேரமாக ரேஸிங்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பெரும் இன்னல்களைச் சந்தித்த அப்பகுதி வாசிகள் சிலர் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து, வாக்கி டாக்கி மூலம் அந்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு தகவல் பரிமாறப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராஜேந்திர நகர் போலீஸார் இரு கார்களையும் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். பின்னர், வாகனங்களின் ஆவணம் மற்றும் காரை ஓட்டிவந்த இளைஞர்களைப் பற்றி ஆய்வை செய்தனர்.

இதில், லம்போர்கினையை இயக்கியவர் பிரதீக் என்றும் ஆடியை ஓட்டி வந்தவர் சேதன் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் ஷம்ஷாபாத்தில் இருந்து மெஹ்திபட்னம் சென்றபோதே இந்த ரேஸிங் விதிமீறலில் ஈடுபட்டனர். சாலை வெறிச்சோடி காணப்பட்டதாலேயே துரித வேகத்தில் சென்றதாக அந்த இளைஞர்கள் போலீஸாரிடம் காரணம் கூறினர்.

இருப்பினும், பொது சாலையில் குறிப்பிட்ட வேகத்தை தாண்டி வாகனத்தை இயக்குவது இந்திய மோட்டார் வாகன சட்டபடி குற்றமாகும். ஆகையால், இரு இளைஞர்களின் விலையுயர்ந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையம் எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்விரு கார்களும் பயணித்த சாலையில் கேமிரா பொருத்தப்படாத காரணத்தால் எந்த வேகத்தில் கார்கள் ரேஸ் செய்தன என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை. இதேபோன்று, இந்த இளைஞர்கள்மீது போலீஸார் என்னமாதிரியான நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதுகுறித்த தகவல் வெளியாகவில்லை.

ஆனால், மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கின்ற வகையில் வாகனத்தை இயக்கியது, மோட்டார் வாகன சட்டத்தை மீறியது உள்ளிட்ட நடவடிக்கைள் அவர்கள்மீது பாயலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுபோன்று, விலையுயர்ந்த வாகனங்களை வைத்திருக்கும் செல்வந்தர்கள் விதிமீறலில் ஈடுபடுவது முதல்முறையல்ல. இதற்கு முன்னதாகவும் பல்வேறு சம்பவங்கள் இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








