3 மாதத் தவணைகளுக்கு நாங்க கேரண்டி... சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ஹூண்டாய்!
இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு புதிய திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ். கார் வாங்கி திட்டமிட்டு, வேலை இழப்பு அச்சத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் அதிக நம்பிக்கையை தருவதாக இருக்கும். இந்த திட்டம் பற்றிய கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் பிரச்னையால் ஏற்பட்டுள்ள முடக்கத்தை சாதுர்யமாக கையாளும் முயற்சிகளில் ஹூண்டாய் இறங்கி உள்ளது. ஏற்கனவே, ஆன்லைன் மூலமாக கார் விற்பனை செய்யும் நடைமுறைகளை அறிமுகப்படுத்தியது. அத்துடன், கொரோனாவுடன் போராடும் அரசு மற்றும் சுகாதாரத் துறையினருக்கு உதவிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில், டீலர்களில் கார் விற்பனையை துவங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஹூண்டாய் இறங்கி உள்ளது. ஆனால், பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் ஒன்றரை மாதங்களாக மூடப்பட்டுள்ளதால், அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் சம்பள குறைப்பு, ஆட்குறைப்பு அபாயங்களில் சிக்கி உள்ளனர்.

இந்த சூழலால் கார் விற்பனையில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. எனினும், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை மனதில் வைத்து கார் வாங்குவதற்கு திட்டமிடலாம். ஆனால், வேலை இழப்பு அச்சம் அவர்களை வாட்டி வதைத்து வருகிறது.

இதனை மனதில் வைத்து, இந்த மாதம் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசத்தல் அறிவிப்பை ஹூண்டாய் மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த மாதத்தில் புதிய ஹூண்டாய் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கான மாதத் தவணை உத்தரவாத திட்டத்தை ஹூண்டாய் அறிவித்துள்ளது.

இதன்படி, இந்த மாதம் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஓர் ஆண்டில் வேலை இழப்பு ஏற்படும் பட்சத்தில், மூன்று மாதங்களுக்கான மாதத் தவணையை ஹூண்டாய் ஈடுகட்டும். இந்த திட்டம் கார் வாங்கிய நாளில் இருந்து ஓர் ஆண்டிற்கு செல்லத்தக்கதாக இருக்கும்.

அதேநேரத்தில், முதல் மூன்று மாதங்கள் கணக்கில் கொள்ளப்படாது. அதாவது, வாடிக்கையாளர்களே கட்டாயம் செலுத்த வேண்டும். அதன்பிறகான 9 மாத காலத்தில் ஏதேனும் வேலை இழப்பு பிரச்னை ஏற்பட்டால், மூன்று மாதங்களுக்கான மாதத் தவணையை ஹூண்டாய் ஏற்றுக் கொள்ளும்.

இந்த திட்டம் குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில், புதிய க்ரெட்டா, டூஸான், கோனா மற்றும் எலான்ட்ரா உள்ளிட்ட கார்களை வாங்குவோருக்கு இல்லை என்றும் ஹூண்டாய் தெளிவுப்படுத்தி உள்ளது.

அதாவது, பட்ஜெட் கார் வாங்கும் நடுத்தரப் பொருளாதார பிரிவு வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் வகையில் இந்த திட்டத்தை ஹூண்டாய் அறிவித்துள்ளது. இந்த திட்டம் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் அமையும். ஆனால், இந்த மாதத்திற்குள் வாங்குவோருக்கு மட்டுமே பொருந்தும் என்பதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம்.


Click it and Unblock the Notifications








