கொரோனா ஒழிப்பு போர்... பிரதமரின் பிஎம் கேர்ஸ் நிதிக்கு அள்ளிக்கொடுத்த ஹூண்டாய்!
கொரோனா ஒழிப்புப் போரில் பிரதமரின் பிஎம் கேர்ஸ் நிதிக்கு ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் பெரிய அளவிலான தொகையை கொடுத்து நெகிழ வைத்துள்ளது.

கொரோனா தாக்கம் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. ஒரு புறம் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. மறுபுறத்தில் பெரும் பொருளாதார இழப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்த இரட்டை தாக்குதலால், கொரோனா எதிர்ப்பு போருக்கு அதிக அளவிலான நிதி உதவியும், இதர உதவிகளும் அரசாங்கத்திற்கு தேவைப்படுகிறது.

அந்தவகையில், கொரோனா எதிர்ப்பு போருக்கு தேவையான நிதியை பெறுவதற்காக பிஎம் கேர்ஸ் என்ற நிவாரண நிதி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கினார். இந்த அசாதாரண சூழலில், பிஎம் கேர்ஸ் நிதி திட்டத்திற்கு நாட்டு மக்களுக்கும், நிறுவனங்களும் நிதி உதவியை வழங்குமாறும் பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்தார்.

இந்த வேண்டுகோளை ஏற்று, மக்களும், நிறுவனங்களும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. அந்த வகையில், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ், பிரதமரின் பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ.7 கோடியை வழங்கி உள்ளது.

இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்எஸ் கிம் கூறுகையில்,"சமூகத்திற்கு சிறந்த திட்டங்களையும், உதவிகளையும் வழங்குவதில் எங்களது பவுண்டேஷன் முக்கிய நோக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த சவாலான தருணத்தில் பிஎம் கேர்ஸ் மூலமாக இந்திய மக்களுக்கு உதவி செய்வதை கடமையாக கருதுகிறோம். மனிதாபிமானத்துடன் இந்த மோசமான நிலையை கடப்பதற்கு இந்தியாவுடன் உறுதுணையாக இருப்போம்,"என்று தெரிவித்துள்ளார்.

ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சென்னை அருகே கார் ஆலைகளை அமைத்துள்ளது. மேலும், கொரோனா தடுப்புப் பணிகளுக்காக அண்மையில் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நிதி உதவியையும் வழங்கியது.

கொரோனா ஒழிப்புப் போரில் ஈடுபட்டுள்ள மருத்துவமனைகளுக்காக கொரியாவிலிருந்து ரூ.4 கோடி மதிப்புடைய பரிசோதனை உபகரணங்களையும், வென்டிலேட்டர் கருவிகளையும் கூட இறக்குமதி செய்து வழங்கியது.

அத்துடன், மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் விசேஷ உடைகள், முக கவசங்கள் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, ஹரியானா மற்றும் டெல்லி மாநில அரசுகளுக்கும் தயாரித்து வழங்கி வருகிறது.

மொத்தத்தில் கொரோனா எதிர்ப்பு தடுப்புப் பணிகளுக்காக தனது முழுமையான ஒத்துழைப்பையும், நிதி உதவிகளையும் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது. இதேபோன்று, மாருதி சுஸுகி, மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் அதிக அளவில் கொரோனா தடுப்புப் பணிகளில் தங்களதை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications








