எலெக்ட்ரிக் கார்களுக்காக தனி பிராண்டை அறிமுகப்படுத்தியது ஹூண்டாய்!
உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமாக மாறுவதற்கான அதிரடி திட்டங்களுடன் வரிந்து கட்டி களமிறங்கி உள்ளது ஹூண்டாய் மோட்டார் நிறுவனம். மேலும், எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கென புதிய பிராண்டையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

வாகனப் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுக்கும் விதத்தில், மாற்று எரிபொருள் வாகனங்களை உருவாக்கும் முயற்சிகளில் கார் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதற்கு பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்கள் சிறந்த தீர்வாக கருதப்படுகின்றன. இதற்கு தக்கவாறு மின்சார வாகனங்களுக்கான வரவேற்பும் அதிகரித்து வருகிறது.

எனவே, மின்சார கார்களை அறிமுகப்படுத்துவதில் கார் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும், எதிர்காலத்தில் மின்சார கார் மார்க்கெட்டில் முதன்மை பெறுவதற்கான பல வியூகங்களுடன் கார் நிறுவனங்கள் செயலாற்றி வருகின்றன.

இந்த நிலையில், உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் வலுவான வர்த்தகத்திற்கு அடித்தளம் போடும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. இதற்கு தக்கவாறு, எலெக்ட்ரிக் கார்களை புதிய பிராண்டு பெயரில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முடிவு செய்தது.

இதன்படி, ஐயோனிக் என்ற புதிய பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. ஐயோனிக் பிராண்டில் முதலாவதாக ஐயோனிக் 5 என்ற எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது ஹூண்டாய் மோட்டார் நிறுவனம். அடுத்த ஆண்டு இந்த முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் ஐயோனிக் பிராண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து, 2022ம் ஆண்டு ஐயோனிக் 6 என்ற செடான் ரக எலெக்ட்ரிக் காரும், 2024ம் ஆண்டு ஐயோனிக் 7 என்ற எஸ்யூவி வகை எலெக்ட்ரிக் கார் மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஐயோனிக் பிராண்டில் முதல் கார் மாடல் ஹூண்டாய் நிறுவனத்தின் தாயகமான தென்கொரியாவில் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

ஐயோனிக் பிராண்டில் வர இருக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்களில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தெரிவிக்கிறது. ஐயோனிக் பிராண்டு மூலமாக சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் 10 சதவீத மார்க்கெட் பங்களிப்பை பெறுவதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

வரும் 2025ம் ஆண்டுக்குள் 1 மில்லியன் எலெக்ட்ரிக் கார்களை ஐயோனிக் பிராண்டில் விற்பனை செய்வதற்கு ஹூண்டாய் மோட்டார் திட்டமிட்டுள்ளது. மேலும், 2025ம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமாக மாறுவதற்கான இலக்கையும் வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








