ஹூண்டாய் எலெக்ட்ரிக் மினி பஸ் மாடல் கொரியாவில் அறிமுகம்!
பேட்டரியில் இயங்கும் புதிய மினி பஸ் மாடலை ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தென்கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் மினி பஸ் மாடல் குறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால் பெருநகரங்களில் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனை மனதில் வைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மின்சார வாகனங்கள் தயாரிப்புக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வாகனத் தயாரிப்பில் உலகின் சிறந்த நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் மின்சார மினி பஸ் மாடலை தென்கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது.

கன்ட்ரி எலெக்ட்ரிக் என்ற பெயரில் இந்த பஸ் அறிமுகமாகி இருக்கிறது. இந்த பஸ் 7,710 மிமீ நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மினி மாடலானது 15 முதல் 33 இருக்கைகள் கொண்ட மாடல்களில் அங்கு விற்பனைக்கு கிடைக்கும்.

இந்த பஸ்சில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 முதல் 80 கிமீ தூரம் வரை பயணிக்கும். 128kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. டீசல் மாடலைவிட 30 சதவீதம் அதிக செயல்திறன் மிக்கதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பஸ்சில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கதவு திறந்திருந்தால், பஸ் நகராத வகையில் சென்சார்கள் இருக்கின்றன. மேலும், படிக்கட்டில் யாரும் இருந்தாலும் எச்சரிக்கும் வசதியும் உள்ளது.

டீசல் எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் உதிரிபாகங்களுக்கு பதிலாக பேட்டரி மற்றும் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், இதில் அதிக இடவசதியும், ஏறி, இறங்குவதற்கு போதுமான கதவுகள் அமைப்பும் கொடுக்கப்ப்டடு இருக்கிறது.

இருக்கைகளில் வசதியான ஹெட்ரெஸ்ட் அமைப்பு உள்ளது. புதிய சீட் பெல்ட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், அவசர கால பிரேக் பிடிக்கும்போது பயணிகளின் வயிற்றுப் பகுதியில் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாக்கும்.

இந்தியாவிலும் எலெக்ட்ரிக் பஸ் மாடல்களுக்கான வர்த்தகம் அதிகரித்து வருகிறது. எனவே, எதிர்காலத்தில் இந்த எலெக்ட்ரிக் பஸ் மாடல்களையும் ஹூண்டாய் மோட்டார் குழுமம் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு.


Click it and Unblock the Notifications








