சென்னையில் அமைகிறது ஹூண்டாயின் மிகப்பெரிய தொழில்நுட்ப பயிற்சி மையம்... இதனால் என்ன பயன் தெரியுமா?
ஹூண்டாய் நிறுவனத்தின் தொழில்நுட்ப திறன்களுக்கான பயிற்சி மையம் சென்னையில் விரைவில் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களில் ஹூண்டாய் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனத்தின் தயாரிப்பு ஆலை சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகின்றது. இந்நிலையில், ரூ. 150 கோடி மதிப்பில் 'தொழில்நுட்ப திறனுக்கான ஹூண்டாய் அகாடமி' எனும் பயிற்சி மையம் தமிழகத்தில் அமைய இருப்பதாக தகவல் வெளியகியுள்ளது.

இதுகுறித்து ஈடி ஆட்டோ வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த பயிற்சி மையமும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இருங்காட்டுக்கோட்டை பகுதியிலேயே அமைய இருப்பது தெரியவந்துள்ளது. இதையேதான் ஹூண்டாய் வெளியிட்டுள்ள அறிக்கையும் உறுதி செய்துள்ளது. இந்திய இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த தொழில்நுட்ப அகாடமி கொண்டுவரப்பட இருப்பதாகவும் அந்த அறிக்கையில் ஹூண்டாய் கூறியிருக்கின்றது.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) அன்று வெளியிட்ட அறிக்கையில் ஹூண்டாய், "வரவிருக்கும் பயிற்சி மையம் தொழில்நுட்பத்தின் அற்புதமாக விளங்கும். இது, இந்திய இளைஞர்களின் திறனை அடைகாக்கும் கருவியாக செயல்படும். மேலும் இதைக் கொண்டு புதுமைகள் மற்றும் எதிர்கால வாகனங்கள் மீதும் கவனம் செலுத்தப்படும்" இவ்வாறு கூறியுள்ளது.

சுமார் 6.45 ஏக்கர் பரப்பளவில் இந்த பயிற்சி மையம் அமைய இருக்கின்றது. இதன் மூலமே உலக தரம் வாய்ந்த வல்லுநர்களை உருவாக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. ஹூண்டாயின் இந்த சிறப்பு பயிற்சி மையத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆன்லைன் நிகழ்ச்சியின் வாயிலாக தலைமைச் செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார்.

அப்போது, தொழில்துறை அமைச்சர் எம்சி சம்பத், தலைமை செயலாளர் கே.சண்முகம் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரும், ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரிகள் சிலரும் உடனிருந்தனர். இந்த பயிற்சி மையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. அதேசமயம், ஹூண்டாய் பயிற்சி மையத்தை உருவாக்குவதற்கான பணியைத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் எம்டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான எஸ்எஸ் கிம் கூறியதாவது, "இது நம் அனைவருக்கும் சிறப்பான நிகழ்வாகும். ஏனெனில், வரவிருக்கும் இந்த பயிற்சி மையம் மேம்பட்ட மற்றும் அதிநவீன பயிற்சி அகாடமி ஆகும். எதிர்காலத்தில் இளைஞர்களை பெரிதும் மேம்படுத்துவதற்கான ஓர் வாய்ப்பை வழங்கும்" என்றார்.

மேலும், பேசிய அவர், "இது, தமிழகம் மற்றும் இந்தியாவை உலகத் தளத்தில் சிறப்பு அந்தஸ்தைப் பெற உதவும். வாகனத் துறை மட்டுமின்றி அதற்கு அப்பால் தொழில்துறை வளர்ச்சியின் முன்னணி இடத்தில் நிலை நிறுத்தவும் இது பங்களிக்கும். புதிய பயிற்சி மையத்தின் மூலம் சிறந்த திறன் மிக்க குழுவை உருவாக்குவோம்" என உறுதியுடன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த பயிற்சி மையம் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்க உள்ளது. மேலும், பயனாளியை ஆல் ரவுண்டராகவும், அவரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்த பயிற்சி மையம் வழி வகுக்கும். வளர்ந்து வரும் புதுமையாளர்களுக்கு அவர்களின் திட்டங்களை யதார்த்தமாக மொழிபெயர்க்க வசதிகளை வழங்கும். இதற்காக, ஒரு கண்டுபிடிப்பு மையத்தை உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்" என்றும் அவர் கூறினார்.

ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த கூற்றால் இந்தியர்கள் பலர் 'தொழில்நுட்ப திறனுக்கான ஹூண்டாய் அகாடமி' மூலம் பலனடைய இருக்கின்றனர் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. மேலும், இது இந்திய இளைஞர்களின் திறனை சர்வதேச அளவில் வெளிப்படுத்த உதவும் எனவும் தெரிகின்றது.

ஹூண்டாய் நிறுவனம் நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனம், தற்போது இந்தியாவில் விழாக் காலம் கலைப்பூண்டுள்ளதால் வாகன விற்பனையை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே ரூ. 150 கோடி மதிப்பில் பயிற்சி மையத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








