சென்னை ஹூண்டாய் கார் ஆலை விரைவில் திறக்கப்படுகிறது
கொரோனாவால் மூடப்பட்டுள்ள சென்னை ஹூண்டாய் கார் ஆலையில் உற்பத்திப் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா பிரச்னை காரணமாக, தேசிய ஊரடங்கு கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. மக்கள் வீடுகளில் முடங்கி உள்ள நிலையில், அத்தியாவசிய சேவை நிறுவனங்களை தவிர்த்து, பிற அனைத்து நிறுவனங்களும், வர்த்தக ஸ்பானங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பொது முடக்கத்தின் காரணமாக, கார் ஆலைகளும் கால வரையின்றி மூடிவைக்கப்பட்டுள்ளன. வரும் 17ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்படாத இந்த சூழலில், வர்த்தக ஸ்பானங்களை திறப்பதற்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் ஊரடங்கு விதிகளில் தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, ஆலைகளை திறப்பதற்கான ஆயத்தப் பணிகளில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில், சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் கார் ஆலை மீண்டும் திறக்கப்பட உள்ளது குறித்து டெக்கான் ஹெரால்டு தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தொழிற்பேட்டைகளில் வர்த்தக நடவடிக்கைகள் துவங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதற்கு ஹூண்டாய் வரவேற்பு தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம் (06/05/2020) முதல் ஹூண்டாய் கார் ஆலையில் உற்பத்தி துவங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடக்க இருப்பதாகவும், வரும் வாரங்களில் குறைந்த இலக்குடன் கார் உற்பத்தி துவங்கப்பட உள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கார் ஆலையில் உற்பத்திப் பணிகளை துவங்குவதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும், ஆலையில் உட்புறத்தில் கிருமி நாசினி தெளிப்பு மற்றும் பணியாளர்கள் இடையே சமூக இடைவெளி கடைபிடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மே மாதத்தில் 12,000 முதல் 13,000 கார்களை உற்பத்தி செய்வதற்கும் ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. அதாவது, ஊரடங்கு நீடிக்கும் வரை குறிப்பிட்ட காலத்திற்கு குறைந்த அளவு பணியாளர்களை கொண்டு ஒரே ஷிஃப்ட்டில் கார் உற்பத்தியை துவங்குவதற்கும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

டீலர்களில் 10 நாட்களுக்கான இருப்பு மட்டுமே இருக்கும் நிலையில், கார் உற்பத்தியை துவங்கி படிப்படியாக அதிகரிக்கவும் ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கொரோனா பாதிப்பை பொறுத்து, அடுத்த மாதம் உற்பத்தியை சற்றே அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனினும், இயல்பு நிலைக்கு வருவதற்கு மேலும் சில மாதங்கள் பிடிக்கும் என கருதப்படுகிறது.

இதனிடையே, இந்த ஆலை திறக்கப்பட உள்ள செய்தி, அங்கு பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை தந்துள்ளது. உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்படும் என்பதால், அடுத்த சில மாதங்களில் நிலைமை ஓரளவு சீரடையும் வாய்ப்பு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








