ஷோரூம்களில் முன்பதிவு மெல்ல அதிகரிக்கிறது... ஹூண்டாய் உற்சாகம்!
கொரோனா பிரச்னைக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட ஹூண்டாய் கார் ஷோரூம்களில் நேரடி முன்பதிவு மெல்ல அதிகரித்து வருகிறது. இது அந்நிறுவனத்திற்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

கொரோனா பிரச்னையால் கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக ஹூண்டாய் கார் ஷோரூம்கள் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில், பிரச்னை குறைவான பகுதிகளில் தனது ஷோரூம்களை உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறந்தது ஹூண்டாய் மோட்டார்ஸ்.

மேலும், நாடு முழுவதும் மொத்த ஹூண்டாய் ஷோரூம்களில் 35 சதவீதம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. மேலும், படிப்படியாக இதர பகுதிகளிலும் ஷோரூம்களை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், தனது ஷோரூம்களில் முன்பதிவு எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருவதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஆட்டோகார் இந்தியா தளத்திடம் பேசிய ஹூண்டாய் அதிகாரி தருண் கர்க், இதுவரை திறக்கப்பட்டுள்ள ஷோரூம்களில் 17,000 பேர் புதிய கார் வாங்குவதற்கான விசாரணைகளை செய்துள்ளனர்.

மேலும், 2,500 பேர் புதிய கார் வாங்குவதை உறுதி செய்யும் வகையில் முன்பதிவு செய்துள்ளனர். ஷோரூம்கள் மீண்டும் திறக்கப்பட்டது முதல் 1,600 கார்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளன. இதர பகுதிகளிலும் ஷோரூம்களை திறக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். எனவே, வரும் நாட்களில் முன்பதிவு மெல்ல அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தற்போது கிடைத்துள்ள முன்பதிவு எண்ணிக்கை வழக்கத்தைவிட குறைவுதான் என்றாலும், நிலைமை படிப்படியாக சீரடையும் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த 13ந் தேதி 450 முன்பதிவுகளை பெற்றோம். ஆனால், வழக்கமாக நாள் ஒன்றுக்கு 1,400 முன்பதிவுகளை பெற்று வந்தோம். இது விரைவில் சீரடையும் என்று நம்புகிறோம்.

கர்நாடகா, கேரளாவில் அனைத்து ஷோரூம்களையும் திறந்துவிட்டோம். பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு மற்றும் அரசு விதிமுறைகளை பின்பற்றி ஷோரூம்களையும், சர்வீஸ் மையங்களையும் திறக்க முயற்சித்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

இதனிடையே, கொரோனா பாதிப்பால் கார் விற்பனையில் இந்த ஆண்டு கடும் சரிவு ஏற்படும் என்றும் ஹூண்டாய் தெரிவித்துள்ளது. அதாவது, இந்த ஆண்டு மொத்த விற்பனைியில் 20 சதவீதம் சரிவு ஏற்படும் என்று கணிப்பு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








