ஆன்லைன் புக்கிங் மூலமாக கணிசமாக கல்லா கட்டும் ஹூண்டாய்
ஆன்லைன் மூலமாக ஹூண்டாய் கார் நிறுவனத்திற்கு சிறப்பான வர்த்தகம் கிடைக்கத் துவங்கி இருக்கிறது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

கொரோனா வைரஸின் சீற்றம் இன்னும் குறைந்தபாடில்லை. எனினும், தொற்று குறைவான பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன. கடந்த மாத மத்தியில் இருந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஏப்ரலில் பூஜ்யமான கார் வர்த்தகம் கடந்த மாதத்தில் இருந்து மெல்ல எழுந்து நிற்க முயற்சித்து வருகிறது. கடந்த மாதம் 70 சதவீதம் வரை கார் விற்பனை குறைந்துள்ளது. இந்த நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

இதன் காரணமாக, தங்களது வர்த்தக திட்டங்களில் பல்வேறு மாறுதல்களை கார் நிறுவனங்கள் செய்து வருகின்றன. புதிய கார்களை வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்யும் நடைமுறைகள், டோர் டெலிவிரி பெறும் வசதிகளை கார் நிறுவனங்கள் அறிவித்தன.

புதிய கார்களை ஆன்லைனிலேயே பார்த்துக் கொள்வதற்கும், அதன் வசதிகள், சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ளும் விதத்தில், தங்களது இணையதளங்களை மேம்படுத்தியதுடன் பல்வேறு கூடுதல் வசதிகளையும் கார் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், நாட்டின் இரண்டாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஆன்லைன் மூலமாக புக்கிங் நடைமுறைகளை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்திற்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஹூண்டாய் Click To Buy என்ற பெயரில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தை பயன்படுத்தி, 15,000 பேர் புதிய ஹூண்டாய் கார்களை வாங்க பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் 7 லட்சம் பேர் ஹூண்டாய் ஆன்லைன் தளத்தின் மூலமாக புதிய ஹூண்டாய் கார்கள் பற்றிய விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதில், 15,000க்கும் மேற்பட்டோர் புதிய ஹூண்டாய் கார்களை வாங்குவதற்கு பதிவு செய்துள்ளனர். க்ரெட்டா மற்றும் வெனியூ கார்களுக்குத்தான் அதிக முன்பதிவுகள் கிடைத்துள்ளன. மேலும், புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் கார் டெலிவிரி செய்யும் நடைமுறைகளையும் ஹூண்டாய் மேற்கொண்டு வருகிறது.

இதனால், தேசிய ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளில் ஹூண்டாய் கார்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் ஹூண்டாய் நிறுவனத்திற்கு புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தரும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications