கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் ஹூண்டாய் கார் ஷோரூம்கள் திறப்பு!
கொரோனா பாதிப்பு குறைவான இடங்களில் உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் மீண்டும் திறக்கப்பட்டதுடன், கார் விற்பனையும் மெல்ல சூடுபிடிக்கத் துவங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்னையால் கடந்த ஒன்றரை மாதங்களாக கார் ஆலைகளும், ஷோரூம்களும் மூடப்பட்டுள்ளன. வரும் 17ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருந்தாலும், கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகள் பாதுகாப்பு வழிகாட்டு முறைகளுடன் துவங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கார், பைக் நிறுவனங்கள் கார் உற்பத்தி மற்றும் விற்பனையை துவங்குவதில் மும்முரம் காட்டி வருகின்றன. கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் டீலர்களையும் மீண்டும் திறந்து விற்பனையை துவங்கி இருக்கின்றன. இதன்படி, கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் உள்ள 225 ஹூண்டாய் கார் ஷோரூம்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த இரு தினங்களாக ஷோரூம்களில் கார்களுக்கான முன்பதிவு, விற்பனை பணிகள் பாதுகாப்பு விதிகளை பின்பற்றி நடந்து வருகிறது. கடந்த இரு தினங்களில் மட்டும் 4,000க்கும் மேற்பட்டோர் புதிய கார் வாங்குவது குறித்த விசாரணைகளை செய்துள்ளதாக ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரு நாட்களில் புதிய கார் வாங்குவதற்காக 500 பேர் முன்பதிவு செய்துள்ளனராம். அத்துடன், 170 கார்களை விற்பனை செய்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்களுக்கான புக்கிங் மற்றும் விற்பனை மெல்ல சூடுபிடிக்கத் துவங்கி இருக்கிறது.

மேலும், ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலமாக 20,000 முன்பதிவுகள் வரை பெற்றிருப்பாதகவும் ஹூண்டாய் தெரிவித்துள்ளது. சென்னை ஆலையில் நேற்று முதல் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட்டு இருப்பதுடன், படிப்படியாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. ஆலையில் சமூக இடைவெளி மற்றும் உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் உற்பத்தி பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த மாதம் சென்னை கார் ஆலையில் 12,000 முதல் 13,000 கார்களை உற்பத்தி செய்வதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. விற்பனை அதிகரிக்கும்போது, படிப்படியாக உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டவுடன் கார் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் கார் நிறுவனங்களுக்கு உற்சாகத்தை தரும் விஷயமாக இருக்கும். ஏனெனில், கடந்த ஒன்றரை மாதங்களாக ஒரு யூனிட் கூட விற்பனை செய்ய முடியாமல் பெரும் முதலீட்டுடன் கார் நிறுவனங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன. அங்கு பணியாற்றுவோருக்கும் இது மகிழ்ச்சி தரும் செய்தியாக அமையும்.


Click it and Unblock the Notifications








