டீசல் கார்களுக்கு தொடர்ந்து அதிக டிமான்ட்: ஹூண்டாய் அதிகாரி தகவல்
பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வந்த பின்னரும், டீசல் கார்களுக்கு தொடர்ந்து சிறப்பான வரவேற்பு இருந்து வருவதாக ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி தருண் கார்க் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 1ந் தேதி முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்தன. இதனையடுத்து, அனைத்து வாகனங்களிலும் பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்ட எஞ்சின்களை பயன்படுத்துவது கட்டாயமானது.

இந்த நிலையில், டீசல் எஞ்சின் கார்களை மேம்படுத்துவதற்கு அதிக முதலீடு செய்ய வேண்டி இருந்ததால், பல நிறுவனங்கள் டீசல் எஞ்சின் கார் உற்பத்தியை நிறுத்தியதுடன், பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளை மட்டுமே வழங்குவதாக அறிவித்தன. மாருதி, ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்கள் டீசல் கார்களின் விற்பனையை அடியோடு நிறுத்தின.

மாசு உமிழ்வு விதிகள் கெடுபிடியாக்கப்படுவதற்கு அச்சப்பட்டு டீசல் கார்கள் வாங்குவதையும் வாடிக்கையாளர்கள் தவிர்க்கும் நிலை ஏற்பட்டது.

மேலும், முதலீடு செய்யும் அளவுக்கு டீசல் கார்களின் விற்பனை இருக்காது என்றும் அவரை கருதின. இந்த நிலையில், ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் மட்டும் தொடர்ந்து பிஎஸ்-6 தரத்திற்கு இணையான டீசல் எஞ்சின் தேர்வுகளை கார்களில் தொடர்ந்து வழங்குகின்றன.

இந்த நிலையில், டீசல் கார்களுக்கு குறிப்பிடத்தக்க வர்த்தகம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு ஹூண்டாய் மோட்டார் இந்தியா விற்பனைப் பிரிவு தலைமை அதிகாரி தருண் கார்க் பேட்டி அளித்துள்ளார்.

அதில்,"க்ரெட்டா எஸ்யூவியின் வாடிக்கையாளர்கள் 60 சதவீதம் பேர் டீசல் வேரியண்ட்டுகளை வாங்குவதற்கே அதிக முன்னுரிமை கொடுக்கின்றனர் மேலும், வெனியூ காரின் வாடிக்கையாளர்களில் 32 முதல் 33 சதவீதம் பேரும், வெர்னா வாடிக்கையாளர்களில் 30 முதல் 33 சதவீதம் பேரும் டீசல் வேரியண்ட்டுகளை வாங்குவதற்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் டீசல் கார்களுக்கான சந்தை மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. டீசல் எஞ்சின் கார்கள் அதிக மைலேஜையும், அதிக டார்க் மூலமாக சிறப்பான பிக்கப்பையும் வழங்குவதால், வாடிக்கையாளர்கள் டீசல் கார்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். எனவே, டீசல் காரை விட்டுவிட்டு வாடிக்கையாளர்கள் கவனத்தை உடனடியாக திசை திருப்ப இயலாது," என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் டீசல் கார்களுக்கு மிக வலுவான சந்தை உள்ளது. மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் டீசல் கார்களுக்கு மிக அதிக வரவேற்பும், மிக வலுவான சந்தையும் உள்ளது. டீசல் காரை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, அந்த தேர்வை வழங்குவது முக்கியம் என்று நம்புகிறோம்.

மேலும், வாடிக்கையாளர்களின் தேர்வுகளை ஒதுக்கிவிட முடியாது. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், பெட்ரோல், டீசல், டர்போ எஞ்சின், சிஎன்ஜி என பலதரப்பட்ட வகைகளில் எஞ்சின் தேர்வுகளை வழங்குவது அவசியம். இதன்மூலமாக எங்களது இலக்கை அடைய முடியும்," என்று தெரிவித்துள்ளார்.

ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தற்போது பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.2 லிட்டர், 1.5 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளை தனது கார்களில் வழங்கி வருகிறது. இந்த நிலையில், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஐ20 காரில் 50 சதவீதம் அளவிற்கான புக்கிங் டீசல் வேரியண்ட்டுகளுக்கே கிடைத்து வருவதாகவும், வாடிக்கையாளர்களின் திருப்தியும் முக்கியம்,"என்று கார்க் கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications








