சென்னை ஹூண்டாய் ஆலை மீண்டும் திறப்பு... முதல் நாளில் 200 கார்கள் உற்பத்தி!
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டு இருந்த சென்னை ஹூண்டாய் கார் ஆலையில் மீண்டும் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இது பணியாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு இருக்கும் வாகன உற்பத்தி ஆலைகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு வழிகாட்டு முறைகளுடன் வாகன ஆலைகளில் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சென்னை கார் ஆலையிலும் உற்பத்திப் பணிகள் நேற்று மீண்டும் துவங்கப்பட்டது.

முதல்கட்டமாக ஒரே ஷிஃப்ட்டில் கார் உற்பத்தி செய்யப்படுகிறது. அரசின் வழிகாட்டு முறைகளின்படி, சமூக இடைவெளி மற்றும் முக கவசங்கள் அணிந்து பணியாளர்கள் உற்பத்திப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆலையில் கிருமி நாசினி தெளிப்பு முறையும் பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில், ஆலை திறக்கப்பட்டு மீண்டும் உற்பத்தி துவங்கியுள்ள நிலையில், முதல் நாளில் 200 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

வரும் நாட்களில் இந்த எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும், டீலர்களில் இருப்பு இருக்கும் கார்களை விற்பனை செய்தால் மட்டுமே, உற்பத்தியை அதிகரிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.

எனினும், பிற நிறுவனங்களை காட்டிலும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்திற்கு ஊரடங்கு காலத்திலும் கணிசமான முன்பதிவு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 20,000 முன்பதிவுகளுக்கு மேல் பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஆன்லைன் மூலமாக கார் விற்பனையை செய்வதற்குமான வாய்ப்புகளையும் ஹூண்டாய் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஊரடங்கால் வீடுகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக கார்களை டெலிவிரி கொடுக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.

வரும் 17ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்பிறகு ஊரடங்கு விதிகளில் மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, படிப்படியாக கார் விற்பனையை ஹூண்டாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








