ஹூண்டாய் ஷோரூமில் பணியமர்த்தப்பட்ட நாய்! அடையாள அட்டையுடன் ஜம்முனு ஒரு போஸ்! என்ன வேலைனு தெரியுமா..?
புதிய கார்களை விற்கும் ஷோரூம் நிர்வாகம் தெருவில் சுற்றித் திரிந்த நாய் ஒன்றை ஏற்றுக்கொண்டு, அதனைப் பணியாளராகவும் சேர்த்துக் கொண்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கழுத்தில் அடையாள அட்டையுடன் புதிய கார்களை விற்பனைச் செய்யும் ஷோரூமில் நாய் ஒன்று வலம் வருவதைப் போன்று புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த புகைப்படத்தை அதன் உரிமையாளர் பதிவிட்ட மிக குறைந்த நாளிலேயே பலரால் பகிரப்பட்டு 30 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும், கமெண்டுகளையும் வாரி குவித்து வருகின்றது.

தொடர்ந்து அந்த புகைப்படம் வைரலாகிக் கொண்டும் இருக்கின்றது. முக்கியமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக பார்வையாளர்களை அந்த புகைப்படம் பெற்று வருகின்றது. இந்த புகைப்படத்தை பார்க்கையில், கொரோனா வைரசால் ஏற்பட்டு வரும் இழப்பைச் சமாளிக்கும் விதமாக அந்த கார் ஷோரூம் நிர்வாகம், பணியாட்களுக்கு பதிலாக நாயை பணியமர்த்துள்ளியதோ என்ற கேள்வியை எழுப்பும் வகையில் அமைந்துள்ளது.

ஆனால், காரணம் இது இல்லை. வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக அந்த புதிய கார் ஷோரூம் நிர்வாகம் நாயை ஊதியமில்லா வரவேற்பாளாராக பணியமர்த்தியுள்ளது. பொதுவாக கார் ஷோரூம்களில் அழகிய பெண்களையே வாடிக்கையாளர்களைக் கவர வரவேற்பாளராக பணியமர்த்தப்படுவர். சில நேரங்களில் அரிதினும் அரிதாக ஆண்களும் வரவேற்பு இப்பணியை செய்வதுண்டு.

ஆனால், இங்கு முற்றிலும் வித்தியாசமாக வாடிக்கையாளர்களை வரவேற்பதற்காக நாய் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பிரேசிலில் உள்ள ஹூண்டாய் செர்ரா, இஎஸ் எனும் ஷோரூமில்தான் அரங்கேறியிருக்கின்றது. நினைத்துக்கூட பார்க்க முடியாது ஓர் அனுபவமாக, அந்த கார் ஷோரூமிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இது அமைந்திருக்கின்றது.

நாய்கள்குறித்து பல்வேறு விநோதமான சம்பவங்கள் உலகம் முழுவதும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சாலை விதியை மீறும் வாகன ஓட்டிகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் ரயிலில் தொங்கியபடி பயணிப்பவர்களைக் குறைத்தவாறு உள்ளே போகச் செல்வது என பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. ஏன், திருடனிடம் இருந்தும்கூட இளம் பெண்ணை நாய் காப்பாற்றிய நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது.

இவ்வாறு, பாதுகாவலனுக்கு பாதுகாவலனாகவும், நண்பனுக்கு நண்பனுக்கு நண்பனாகவும் செயல்படும் பண்பினை நாய்கள் கொண்டிருக்கின்றன. இத்தகைய ஓர் நற்பண்பினைக் கொண்டிருக்கும் ஓர் நாயைதான் ஹூண்டாய் ஷோரூம் நிர்வாகம் ஏற்றுக் கொண்டு பணியாளராக நியமித்துள்ளது.

அந்தவகையில், வரவேற்பாளர் பணியைப் பெற்றிருக்கும் அந்த நாய் கோபமான முகத்தையோ அல்லது பாவமான பாவனையையே கொண்டிராமல், ஒற்றை பார்வையிலேயே பார்வையாளர்களைக் கவரும் வகையில் முக தோற்றத்தை கொண்டிருக்கின்றது. மேலும், அதன் தேகமும் மிருதுவானதாக காட்சியளிக்கின்றது. இது ஓர் கைவிடப்பட்ட தெரு நாய் எனக் கூறப்படுகின்றது.

இதைதான் ஊதியமில்லா கவுரவ பணியாளராக ஹூண்டாய் ஷோரூம் நிர்ணயித்துள்ளது. அந்த நாய்க்கு டக்சன் பிரைம் என அந்த ஷோரூம் நிர்வாகம் பெயர் வைத்திருக்கின்றது. இது ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபல கார் மாடலின் பெயர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பெயர் பொறித்த அடையாள அட்டையைதான் டக்சன் தனது கழுத்தில் அணிந்தவாறு ஷோரூமில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றது.

கார் விற்பனை நிர்வாகத்தின் இந்த செயலுக்கு அப்பகுதி வாசிகள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகின்றது. அவர்கள் மட்டுமின்றி இணையவாசிகள் பலரும்கூட ஹூண்டாய் செர்ரா நிர்வாகத்திற்கு தங்களது பாராட்டு மழையைப் பொழிந்து வருகின்றனர்.

இந்த நிகழ்வுகுறித்து வேர்ல்ட் ஆஃப் பஸ் (World of Buzz) எனும் தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, டக்சன் பிரைம் நாயினை கார் ஷோரூம் நிர்வாகம் கடந்த மே மாதம் 21ம் தேதியே ஏற்றுக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், இதனை சக ஊழியராக ஏற்றுக் கொண்ட பிற பணியாட்கள், நாய்க்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்டவை எப்போதும் கிடைக்குமாறு வழிவகைச் செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இதுமட்டுமின்றி, அந்நாய் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது தடுப்பூசிகள் மற்றும் சுத்தம் செய்யும் பணியையும் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், வரும் காலங்களில் ஷோரூமில் வாடிக்கையாளர்களை வரவேற்பது, பாதுகாப்பது என பலவிதமான ரோல்களில் அந்த நாய் ஷோரூமில் பணியாற்ற இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








