முதல் முறையாக கேமரா கண்களில் சிக்கிய புதிய கார்... ஹூண்டாயின் விலை குறைவான எலெக்ட்ரிக் காரா?
விலை குறைவான ஹூண்டாய் எலெக்ட்ரிக் காரை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களின் ஆவலை மேலும் தூண்டும் வகையிலான புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகின்றன. தற்போதையில் நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி, எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி உள்ளிட்ட மின்சார தயாரிப்புகள் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதுதவிர ஹூண்டாய் நிறுவனமும் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்பனை செய்து வருகிறது.

ஆனால் அதன் விலை சற்று அதிகமாக உள்ளது. எனவே அனைத்து தரப்பினராலும், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை வாங்குவது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. எனவே அனைத்து தரப்பினரும் வாங்க கூடிய வகையில், விலை குறைவான மாஸ்-மார்க்கெட் எலெக்ட்ரிக் கார் ஒன்றை இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாயின.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இந்திய சந்தையில் மாஸ்-மார்க்கெட் எலெக்ட்ரிக் கார் ஒன்றை களமிறக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஹூண்டாய் நிறுவனம் தற்போது ஆராய்ந்து வருகிறது. இந்திய சந்தைக்கு ஏற்ற ரேஞ்ச், பவர் மற்றும் விலை உள்ளிட்ட அம்சங்களுடன் மாஸ்-மார்க்கெட் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய முடியுமா? என்பது குறித்த ஆய்வுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன.

இப்படிப்பட்ட சூழலில், புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்றை ஹூண்டாய் நிறுவனம் சோதனை செய்து வரும் தகவல்கள் தற்போது நமக்கு கிடைத்துள்ளன. அத்துடன் அந்த கார் முதல் முறையாக கேமரா கண்களில் சிக்கியுள்ளது. அதன் ஸ்பை படங்கள் முதல் முறையாக வெளியாகி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன.

ஆனால் இந்த ஸ்பை படங்கள் கிடைத்திருப்பது இந்தியாவில் இருந்து அல்ல. தென் கொரியாவில்தான் இந்த கார் கேமரா கண்களில் சிக்கியுள்ளது. இந்தியா உள்ளிட்ட ஆசிய சந்தைகளுக்கான மாஸ்-மார்க்கெட் எலெக்ட்ரிக் காராக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படும் புரோட்டோடைப்புகள், தென் கொரியாவில் லாரியில் கொண்டு செல்லப்படும்போது புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளன.

சோதனை தளத்திற்கு கொண்டு செல்லப்படும்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை ஹூண்டாய் ஏஎக்ஸ்1 (Hyundai AX1) என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் வாகனங்கள் என சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஆட்டோடைம்ஸ்நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சோதனை கார்களின் உருவம் முழுமையாக மறைக்கப்பட்டிருந்தது.

ஹூண்டாய் ஏஎக்ஸ்1 சிறிய காரின் தொழில்நுட்ப விபரங்கள் எதுவும் தற்போதைக்கு கிடைக்கவில்லை. எனினும் இதன் டிசைன் அம்சங்களை வைத்து பார்க்கையில், இது எலெக்ட்ரிக் காராகதான் இருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன் இந்த கார் இந்திய சந்தைக்கு கொண்டு வரப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து இந்த அளவு மற்றும் வடிவம் கொண்ட ஒரு கார் இந்தியாவிற்கு வரவில்லை என்றால் ஆச்சரியம்தான். எனவே இந்தியாவிற்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 2022 ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் வடிவில் இந்த கார் காட்சிப்படுத்தப்படலாம் எனவும், அதே ஆண்டின் கடைசியிலோ அல்லது 2023ம் ஆண்டிலோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








