புத்தாண்டில் புதிய கார் வாங்க போறீங்களா? அப்போ இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளாவிட்டால் பிரச்னைதான்...
வரும் ஜனவரி 1ம் தேதி முதல் முன்னணி நிறுவனங்களுடைய கார்களின் விலை உயரவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் நிறுவனம் புத்தாண்டு முதல் தனது கார்களின் விலையை அதிரடியாக உயர்த்தவுள்ளது. அனைத்து கார்களின் விலையையும் உயர்த்தவுள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. உற்பத்தி செலவுகள் அதிகரித்திருப்பதே இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. மாடல்களை பொறுத்து இந்த விலை உயர்வு வேறுபடும்.

ஆனால் புதிய விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய விலைகள் அறிவிக்கப்படும். வரும் ஜனவரி 1ம் தேதி முதல் டெலிவரி எடுக்கும் வாடிக்கையாளர்கள் உயர்த்தப்பட்ட விலைகளை செலுத்த வேண்டியிருக்கும். எனவே தற்போதைய விலையில் ஹூண்டாய் கார்களை வாங்குவதற்கு இன்னும் சுமார் 2 வாரங்கள் மட்டுமே உள்ளன.

நீங்கள் ஹூண்டாய் கார்களை வாங்க திட்டமிட்டிருந்தால், விலை உயர்விற்கு முன்னதாக வாங்கி விடுவது நல்லது. இதன் மூலம் கணிசமான தொகையை நீங்கள் சேமிக்க முடியும். தற்போதைய நிலையில் கிரெட்டா, கிராண்ட் ஐ10 நியோஸ், வெனியூ மற்றும் ஐ20 போன்ற மாடல்கள் அதிகம் விற்பனையாகி வரும் ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களாக உள்ளன.

இதில், ஹூண்டாய் கிரெட்டாவை பற்றி பார்த்தோமேயானால், இதன் புதிய தலைமுறை மாடல் கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய தலைமுறை மாடலின் டிசைன் மேம்படுத்தப்பட்டிருப்பதுடன், கூடுதலாக சில வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டாவின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் ஹூண்டாய் நிறுவனம் 12,017 கிரெட்டா கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இது சுமார் 80 சதவீதம் அதிகம் ஆகும். புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டாவின் வருகைக்கு பின் கியா செல்டோஸ் எஸ்யூவியின் விற்பனை சற்று சரிவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் கிரெட்டா தவிர ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக்கின் புதிய தலைமுறை மாடலையும் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. புதிய தலைமுறை ஐ20 கார் இந்திய சந்தையில் கடந்த நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காருக்கு தற்போது முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரின் டிசைன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் விசாலமான கேபினையும் இந்த கார் பெற்றுள்ளது. இதுதவிர 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், போஸ் சவுண்டு சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகளும் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரில் வழங்கப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி பலேனோ, டாடா அல்ட்ராஸ் மற்றும் டொயோட்டா க்ளான்சா போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு ஹூண்டாய் ஐ20 விற்பனையில் சவால் அளித்து வருகிறது. இதேபோல் ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் விற்பனையும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்ப கூடிய மாடல்களில் ஒன்றாக இது திகழ்கிறது.

அதே நேரத்தில் ஹூண்டாய் வெனியூ சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவியின் விற்பனையும் நன்றாக இருக்கிறது. கியா சொனெட்டின் வருகையால் கடந்த நவம்பர் மாத விற்பனையில் சற்றே பின்னடைவை சந்தித்திருந்தாலும், வெனியூ காருக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. கியா சொனெட் கடந்த செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் நிறுவனம் மட்டுமல்லாது இன்னும் பல்வேறு நிறுவனங்களும் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளன. இதில், இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி மற்றும் ஃபோர்டு போன்ற நிறுவனங்கள் மிகவும் முக்கியமானவை. விலை உயர்வை தவிர்க்க விரும்புவர்கள் முன்கூட்டியே கார்களை வாங்கி விடுவது நல்லது.


Click it and Unblock the Notifications








