இந்தியாவில் ஊரடங்கு முடிந்தவுடன் அறிமுகமாகும் முதல் ஹூண்டாய் கார் இதுதான்!
ஊரடங்கு முடிந்தவுடன் இந்தியாவில் ஹூண்டாய் அறிமுகப்படுத்த இருக்கும் முதல் கார் மாடல் குறித்த விபரம் வெளியாகி இருக்கிறது.

கடந்த மாதம் 1ந் தேதி முதல் புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அதற்கு தக்கவாறு பிஎஸ்6 கார் மாடல்களை அறிமுகப்படுத்துவதில் கார் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. சில கார் மாடல்கள் எஞ்சின் தரம் உயர்த்தப்பட்டிருப்பதோடு, கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்து கொண்டுள்ளன.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் பல புதிய கார் மாடல்களின் அறிமுகம் தள்ளிப் போய் வருகிறது. எனினும், வரும் 31ந் தேதிக்கு பின்னர் ஊரடங்கு விதிகள் மேலும் தளர்த்தப்படும் வாய்ப்பு இருப்பதால், மேலும் பல புதிய பிஎஸ்6 மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

அந்த வகையில், நாட்டின் இரண்டாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் புதிய மாடல்களை களமிறக்கும் முனைப்பில் உள்ளது. அத்துடன், ஊரடங்கு முடிந்தவுடன் களமிறக்க உள்ள முதல் கார் மாடல் விபரத்தையும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆட்டோகார் இந்தியா தளத்திடம் பேசிய ஹூண்டாய் அதிகாரி தருண் கர்க்,"ஊரடங்கு முடிந்தவுடன் முதல் மாடலாக டூஸான் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்த உள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பிஎஸ்6 தரத்திற்கு இணையான பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. இதில் வழங்கப்பட இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 150 எச்பி பவரையும், 192 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மறுபுறத்தில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 182 எச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களுடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட உள்ளது. மேலும், பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும், டீசல் மாடலில் 8 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்பட உள்ளன. விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உண்டு.

ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் எஞ்சின் மட்டுமின்றி, டிசைனில் சிறிய மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, புதிய க்ரில் அமைப்பு, ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள், பம்பர்களுடன் வர இருக்கிறது.

உட்புறத்தில் புதிய டேஷ்போர்டு அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 8.0 அங்குல ஃப்ளோட்டிங் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட உள்ளது. ஹூண்டாய் புளூலிங்க் கார் கனெக்ட்டிவிட்டி செயலியும் உண்டு. வயர்லெஸ் சார்ஜர்கள், பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் சீட் அட்ஜெஸ்ட்மென்ட் ஆகியவையும் முக்கிய விஷயங்களாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலானது ஜிஎல் ஆப்ஷன் மற்றும் ஜிஎல்எஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. விலையும் சற்று அதிகமாக இருக்கும். ஜீப் காம்பஸ் எஸ்யூவியுடன் இந்தியாவில் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications