ரூ.10 லட்சத்தில் மினி எலெக்ட்ரிக் எஸ்யூவி.. ஹூண்டாய் திட்டம்
ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் புதிய எஸ்யூவி மாடலை ஹூண்டாய் உருவாக்கி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் மாடல்களை வரிசைகட்ட ஆயத்தமாகி வருகிறது. வரும் 2025ம் ஆண்டுக்குள் 16 முழுமையான எலெக்ட்ரிக் கார் மாடல்களை சந்தைக்கு கொண்டு வந்துவிட திட்டம் போட்டு பணியாற்றி வருகிறது.

மேலும், தனது எலெக்ட்ரிக் கார் மாடல்களை ஐயோனிக் என்ற பிராண்டில் உருவாக்கி வருகிறது. இந்த பிராண்டில் ஏராளமான எலெக்ட்ரிக் கார் மாடல்கள் உருவாக்கப்பட்டு உலக அளவில் செல்ல இருக்கிறது. இந்தியாவிற்கு தக்க சில மாடல்களும் இந்த பட்டியலில் உள்ளது.

ஐயோனிக் பிராண்டில் முதலாவதாக மினி எஸ்யூவி மாடல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவி இந்தியாவிற்கு மிகச் சரியான தேர்வாக இருக்கும் என்று காடிவாடி தளம் செய்தி கூறுகிறது. அடுத்த ஆண்டு ஐயோனிக் பிராண்டில் முதல் மாடல் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய மினி எஸ்யூவி ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் உள்ளிட்ட மாடல்களின் பரிமாணத்தை ஒத்த எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும். ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் இது வருவதற்கான வாய்ப்பும் உள்ளது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மற்றும் மஹிந்திரா இ-எக்ஸ்யூவி300 ஆகிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக அமையும் என்றும் தெரிகிறது. எனினும், ரூ.13 லட்சம் முதல் ரூ.15 லட்சத்திற்குள் இந்த மாடலை நிலைநிறுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது.

இந்தியாவில் விலை நிர்ணயம் என்பது வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதுதான் வர்த்தகத்தை நிர்ணயிக்கும். மாருதி நிறுவனமும் சவாலான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் ஐயோனிக் பிராண்டில் முதல் மாடலை கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது.

தற்போது மின்சார கார்களுக்கான பேட்டரி வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி இல்லை என்பதால், பேட்டரி விலை மிக அதிகமாக இருக்கிறது. இதனால், காரின் விலையும் பெட்ரோல், டீசல் கார்களைவிட அதிகமாக நிர்ணயிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவிலேயே பேட்டரி உற்பத்தி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

எனவே, எலெக்ட்ரிக் கார்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, விலையும் மிக சவாலாக நிர்ணயிக்கும் வாய்ப்பு ஏற்படும். அடுத்த சில ஆண்டுகளில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








