வேற லெவல்... கொரோனா வைரஸை அசால்டாக காலி செய்யும் கார்... எப்படினு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க...
கொரோனா வைரசுக்கு எதிராக போரிடும் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் (Corona Virus) தற்போது உலக மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பணிகளில் இந்திய அரசு மிக தீவிரமாக உள்ளது. இந்தியா மட்டுமல்லாது, உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா வைரசுக்கு எதிராக போரிட்டு வருகின்றன. இந்த சூழலில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் கார் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள செய்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொரோனா வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம்தான் இந்த காரை அறிமுகம் செய்துள்ளது என்பது கூடுதல் சிறப்பு. சீனாவை சேர்ந்த மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று கீலே (Geely). ஐகான் என்ற புதிய காரை கீலே நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இது எஸ்யூவி ரக கார் ஆகும். கொரோனா வைரஸை எதிர்த்து, ஐகான் கார் போரிடும் என கீலே நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐகான் காரில் உள்ள அதிநவீன காற்று வடிகட்டுதல் (Air Filtration System) அமைப்பு மூலம் இது சாத்தியம் என கீலே நிறுவனம் கூறியுள்ளது. இந்த காற்று வடிகட்டுதல் அமைப்பானது, என்-95 (N95) சான்றை பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் உள்ளிட்ட நுண்ணுயிரிகள் (பாக்டீரியா மற்றும் வைரஸ்கள்) காரின் கேபினுக்கு உள்ளே நுழைவதை, இந்த காற்று வடிகட்டும் அமைப்பு தடுக்கிறது. இதனை இன்டலிஜென்ட் ஏர் ப்யூரிஃபிகேஷன் சிஸ்டம் (Intelligent Air Purification System - IAPS) என கீலே நிறுவனம் அழைக்கிறது. ஏர் கண்டிஷன் சிஸ்டத்துடன் இணைந்து இந்த தொழில்நுட்பம் செயலாற்றும்.

தீங்கு விளைவிக்க கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்களை வாகனத்தின் கேபினில் இருந்து தனிமைப்படுத்தி வெளியேற்றும் பணிகளை இந்த தொழில்நுட்பம் செய்யும். ஆனால் இதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. எனினும் இது வெறும் மார்க்கெட்டிங் தந்திரமாக இருக்காது என்பதை நாம் நம்பலாம்.

கீலே நிறுவனம் கூறியபடி இந்த தொழில்நுட்பம் வேலை செய்தால், உண்மையிலேயே நல்ல செய்திதான். ஏனெனில் ஒட்டுமொத்த உலகமே கொரோனா வைரஸால் பீதியடைந்திருக்கும் சூழலில், இதுபோன்ற வாகனங்கள் அவசர தேவையாக உள்ளன. சீனாவில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பெரும்பாலானோர் வீடுகளை விட்டே வெளிவருவதில்லை.

எனவே எப்போதும் பரபரப்பாக இருக்கும் சீன சாலைகள் வெறிச்சோடி போயுள்ளன. அப்படி இருக்கையில், இந்த கார் உண்மையிலேயே கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்தால், அது உலகிற்கு நல்ல விஷயமே. தற்போது கீலே ஐகான் எஸ்யூவி (Geely Icon SUV) காரை வாங்க, வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கீலே ஐகான் எஸ்யூவி காருக்கு ஏற்கனவே 30 ஆயிரம் முன்பதிவுகள் குவிந்து விட்டன. இதில், பெரும்பாலான முன்பதிவுகள் சீனாவில் இருந்துதான் வந்துள்ளன. பொதுமக்கள் இந்த காரை நம்புகின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகி விட்டது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைத்திருந்த கான்செப்ட் அடிப்படையில், ஐகான் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

கான்செப்ட் மாடலாக இருந்த ஐகான் எஸ்யூவி காரை இரண்டு ஆண்டுகளில் கீலே நிறுவனம் தயாரிப்பு நிலை மாடலாக உயர்த்தி விட்டது. இந்த காரின் இன்டீரியர் மிகவும் மாடர்ன் ஆக உள்ளது. இந்த காரின் உட்புறத்தில் 10.25 இன்ச் அளவுடைய இரண்டு டிஸ்ப்ளேக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் இன்போடெயின்மெண்ட் செயல்பாடுகளுக்கு பயன்படும்.

கீலே ஐகான் காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 48 V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் உள்ளது. இந்த கூட்டணி ஒட்டுமொத்தமாக 188 எச்பி பவர் (140 kw) மற்றும் 300 என்எம் டார்க் திறனை உருவாக்கும். 7 ஸ்பீடு ட்யூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது.

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை கீலே ஐகான் எஸ்யூவி கார் வெறும் 7.9 வினாடிகளில் எட்டி விடும் திறன் கொண்டது. இந்த கார் ஒரு லிட்டருக்கு 17.54 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என கீலே நிறுவனம் கூறியுள்ளது. ஐகான் காரின் பெர்ஃபார்மென்ஸ் அளவை வைத்து பார்க்கும்போது, இது மோசமான மைலேஜ் கிடையாது.

ஆனால் கீலே ஐகான் எஸ்யூவி காரின் காற்று வடிகட்டுதல் அமைப்பு, உலகையே அச்சுறுத்தி கொண்டுள்ள கொரோனா வைரசுக்கு (Covid-19, கோவிட்-19) எதிராக உண்மையிலேயே போரிடுமா? என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை என்பதையும் மீண்டும் ஒரு முறை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.


Click it and Unblock the Notifications








