70 புதிய வாகனங்கள் அறிமுகத்துடன் இந்திய ஆட்டோ எக்ஸ்போ நிறைவடைந்தது!
கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற சர்வதேச வாகன கண்காட்சியில் 70 புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதனை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்திய ஆட்டோ எக்ஸ்போ என்றழைக்கப்படும் நம் நாட்டின் மிகப்பெரிய சர்வதேச வாகனக் கண்காட்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் உள்ள எக்ஸ்போ மார்ட் வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிய கண்டத்தில் நடக்கும் மிகப்பெரிய வாகன திருவிழாவாகவும் குறிப்பிடப்படுகிறது. மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கும் புதிய கார், பைக் மாடல்களுக்கான முன்னோட்ட நிகழ்வாக இருப்பதால், வாகன பிரியர்கள் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவல் இருந்தது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 5ந் தேதி 15வது இந்திய ஆட்டோ எக்ஸ்போ துவங்கியது. முதல் இரண்டு நாட்கள் பத்திரிக்கையாளர்களுக்கான நிகழ்ச்சிகளும், பிப்ரவரி 7ந் தேதி முதல் 12ந் தேதி வரை பொது பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த முறை வாகனக் கண்காட்சியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல முன்னணி கார், பைக் நிறுவனங்கள் மற்றும் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும், சீனாவை சேர்ந்த கார் நிறுவனங்களான கிரேட்வால் மோட்டார்ஸ் மற்றும் எஃப்ஏடபிள்யூ- ஹெய்மா ஆகியவை ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியாவில் கால் பதிக்க இருப்பதை உறுதி செய்தன.

அடு மேலும், மின்சார வாகனங்களுக்கான யுகம் துவங்கி இருப்பதையடுத்து, மின்சார வாகனங்களின் ஆதிக்கமும் இந்த முறை அதிகம் இருந்ததுடன், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

இந்த முறை ஆட்டோ எக்ஸ்போவில் மொத்தம் 108 நிறுவனங்கள் 352 வாகன மாடல்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இந்த முறை ஆட்டோ எக்ஸ்போவில் 70 புதிய கார், பைக் மாடல்கள் மற்றும் மின்சார வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த கண்காட்சியில் 7 புதிய வாகன மாடல்கள் உலகளாவிய அளவில் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இந்த முறை 15 கான்செப்ட் கார் மாடல்கள், 35 எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பைக் மாடல்களும் பார்வையாளர்களையும், பத்திரிக்கையாளர்களையும் கவர்ந்தன.

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் கார், புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா, கியா கார்னிவல், மாருதியின் கான்செப்ட் கார், ஹவல் மற்றும் ஹெய்மா கார்கள் பார்வையாளர்களிடம் அதீத கவனத்தை பெற்றன. தவிரவும், டாடா அரங்கில் இருந்த சியரா கான்செப்ட் மாடலும் பார்வையாளர்களை ஈர்த்தது.

வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள சுணக்கமான நிலையால் பல முன்னணி கார் நிறுவனங்கள் இந்த முறை ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கவில்லை. அத்துடன், கொரோனா வைரஸ் பிரச்னையும் பார்வையாளர்கள் மத்தியில் ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆன்லைன் மீடியாக்களின் உடனடி அப்டேட்டுகள் காரணமாக, பார்வையாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே ஆட்டோ எக்ஸ்போவை கண்டுகளித்தனர்.

அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள், நோய் தடுப்பு நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. எனினும், வழக்கத்தைவிட பார்வையாளர்களின் வருகை இந்த முறை குறைவாக இருந்ததாக தெரிகிறது. மொத்தம் 6.08 லட்சம் பேர் இந்த முறை ஆட்டோ எக்ஸ்போவை கண்டுகளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்-6 விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வரும் நிலையில், வாகன சந்தையில் சுணக்கமான நிலை காணப்படுகிறது. இந்த நிலை அடுத்து வரும் மாதங்களில் சீராகும் என்று தெரிகிறது. வரும் 2022ம் ஆண்டு நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் மேலும் அதிக நிறுவனங்கள் பங்கேற்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








