கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா ஆண்டுக்கு 1 லட்சம் கோடியை சேமிக்கலாம்... எப்படினு தெரியுமா?
மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், இந்தியாவிற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பது தொடர்பான தகவல்கள் புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

வரும் 2030ம் ஆண்டிற்குள், புதிய வாகனங்கள் விற்பனையில், 30 சதவீத பங்கை மின்சார வாகனங்கள் பெற்றால், இந்தியாவால் கச்சா எண்ணெய் இறக்குமதியில், ஒரு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் (14 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) சேமிக்க முடியும் என தற்போது நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (Council on Energy, Environment and Water - CEEW) இந்த ஆய்வை நடத்தி, தற்போது முடிவுகளை வெளியிட்டுள்ளது. அத்துடன் பவர்டிரெயின், பேட்டரி மற்றும் பொது சார்ஜர்களின் ஒருங்கிணைந்த மார்க்கெட் அளவு 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் (28 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அதிகரிக்கும் எனவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

கூடுதலாக இந்த துறையில் 1.20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர பேட்டரி மறுசுழற்சி, டெலிமாடிக்ஸ் போன்ற வளர்ந்து வரும் பகுதிகளிலும் கணிசமான எண்ணிக்கையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இதில், நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் டைஆக்ஸைடு உமிழ்வு 17 சதவீதம் குறையும், கார்பன் மோனாக்ஸைடு உழிழ்வு 18 சதவீதம் குறையும் மற்றும் பசுமை இல்ல வாயுக்கள் உழிழ்வு 4 சதவீதம் குறையும் ஆகியவை முக்கியமானவை.

எனவே மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பின் மூலம் இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் உலகிலேயே கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

இது மிகப்பெரிய பொருளாதார பிரச்னையாக மாறி வருகிறது. எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்ற லட்சத்தியத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. மத்திய அரசுடன், பல்வேறு மாநில அரசுகளும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.

இந்தியாவின் காற்று மாசுபாடு பிரச்னைக்கும், மின்சார வாகனங்கள் தீர்வாக அமையும் என்பதால், மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் உள்ளிட்ட சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. இதில், பதிவு கட்டணம், சாலை வரி போன்றவற்றில் இருந்து மின்சார வாகனங்களுக்கு விலக்கு போன்றவையும் அடக்கம்.

இதுபோன்ற நடவடிக்கைகளின் பலனாக இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் ஏராளமான மின்சார இரு சக்கர வாகனங்கள் விற்பனைக்கு கிடைக்கும் நிலையில், ஒரு சில மின்சார கார்களும் சந்தையில் கிடைக்கின்றன. வரும் காலங்களில் பல்வேறு புதிய மின்சார தயாரிப்புகள் விற்பனைக்கு வரவுள்ளன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








