கொரோனாவால் ஆட்டோமொபைல் துறைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,500 கோடி வருவாய் இழப்பு!
கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இந்த சூழல், பெரு நிறுவனங்களை கூட திணற வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் தனது கோர முகத்தை காட்டத் துவங்கியிருக்கிறது. இதுவரை 415 பேர் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், 8 பேர் இந்த கொடிய நோய்க்கு உயிர் இழந்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனாவால் மொத்த உலகமும் ஸ்தம்பித்து நிற்கிறது. இதுவரை இல்லாத பெரும் அச்ச உணர்வையும், இழப்புகளையும் கொரோனா ஏற்படுத்தி உள்ளது.

யாரும் எதிர்பாராத இந்த கொள்ளை நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால், மக்கள் வெளியே வர முடியாத நிலை உருவாகி இருப்பதுடன், இயல்பு வாழ்க்கையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அனைத்து தொழில் மற்றும் உற்பத்தி மையங்கள் முடங்கி இருக்கின்றன.

இந்த நிலையில், கொரோனா பிரச்னை ஆட்டோமொபைல் துறைக்கு பெரிய அடியை கொடுத்துள்ளது. கடந்த ஓர் ஆண்டாகவே வாகன விற்பனை மந்தமாக இருந்த நிலையில், தற்போது பிஎஸ்6 வாகனங்களுக்காக பெரிய அளவிலான முதலீடுகளை வாகன நிறுவனங்கள் செய்துள்ளன.

மேலும், சில நிறுவனங்களும், டீலர்களும் கையில் இருப்பில் தேங்கிவிட்ட பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு ஒரு வாரமே கால அவகாசம் உள்ளது. இந்த நெருக்கடியான நிலையில், இந்தியா ஸ்தம்பித்துள்ள நிலையில், விற்பனை அடியோடு முடங்கி உள்ளது.

இந்த சூழலில், கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,500 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், அடுத்த ஒரு வாரம் முதல் 10 நாட்கள் ஆலைகள் மற்றும் டீலர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ரூ.13,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரை இழப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த உற்பத்தி திறனில் ஆட்டோமொபைல் துறை மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. அதாவது, மொத்த உற்பத்தியில் 7.5 சதவீதமும், ஆலை வாயிலான உற்பத்தித் துறையில் 49 சதவீதம் பங்களிப்பையும் வழங்கி வருகிறது.

இந்த சூழலில், இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் ஆட்டோமொபைல் துறைக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்பு, அரசின் வரி வருவாயிலும், வேலைவாய்ப்பிலும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் ஒரு வாரம் கழித்தே, கொரோனா பாதிப்பின் வேகத்தை வைத்து அரசு முடிவுகளை எடுக்கும். அதன் பிறகே, ஆட்டோமொபைல் துறையின் செயல்பாடுகள் சீரடைய வாய்ப்புகள் உள்ளன.
Source: ET Auto


Click it and Unblock the Notifications








