நவராத்திரி பண்டிகை காலத்தில் பட்டையை கிளப்பிய கார் விற்பனை.. மாருதி, ஹூண்டாய், டாடா செம ஹேப்பி
கொரோனாவால் படுத்துக் கொண்ட கார் மார்க்கெட்டை அலேக்காக தூக்கி நிறுத்தி இருக்கிறது நவராத்திரி பண்டிகை. கடந்த ஆண்டு விற்பனையை விட இந்த ஆண்டு கிட்டத்தட்ட ஒரு மடங்கு விற்பனை கூடுதலானதால், முன்னணி கார் நிறுவனங்கள் பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளன.

கடந்த ஆண்டு முதலே கார் நிறுவனங்களுக்கு கட்டம் சரியில்லை. இதில், கொரோனா வேறு சேர்ந்து கொண்டு ஆட்டம் போட்டதால், பல்லாயிரம் கோடி முதலீடு செய்திருந்த நிறுவனங்கள் பெரும் கவலையில் ஆழ்ந்தன. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் கார் விற்பனை குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி கண்டு வருகிறது.

இதனால், கார் நிறுவனங்கள் ஒத்திப்போட்டு வைத்திருந்த கார் மாடல்களை கூட அவசரமாக களமிறக்கி வருகின்றன. மேலும், கொரோனாவால் தனிநபர் வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், பட்ஜெட் கார் மாடல்களுக்கு தேவை கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், வழக்கமாக நவராத்திரி, தீபாவளி பண்டிகை காலத்தின்போது கார் விற்பனை எப்போதுமே உச்சமாக பதிவாகும். இந்த பண்டிகை காலத்தில் வாங்குவதை இந்தியர்கள் பலர் தங்களது செல்வ வளத்தையும், சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும் என்று நம்புகின்றனர்.

அந்த வகையில், இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையின்போது கார் விற்பனை இந்தியாவில் மிகச் சிறப்பான உச்சத்தை பதிவு செய்துள்ளது. மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு இந்த நவராத்திரி சிறப்பானதாக அமைந்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி நவராத்திரி பண்டிகையின் 10 நாட்களின் மட்டும் 96,700 புதிய கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையின்போது 76,000 கார்களை விற்பனை செய்திருந்த மாருதி சுஸுகி, 27 சதவீத உயர்வை விற்பனையில் பெற்றுள்ளது.

அடுத்து நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ், நவராத்திரி பண்டிகையின்போது 10 நாட்களில் மட்டும் 26,068 கார்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை விற்பனையை ஒப்பிடும்போது, இது 28 சதவீதம் கூடுதலாகும்.

வாகன உற்பத்தியில் ஜாம்பவனாக உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது. நவராத்திரி பண்டிகை காலத்தின் 10 நாட்களில் 10,887 கார்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவராத்திரியின்போது 5,725 கார்களை மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்திருந்த நிலையில், தற்போது 90 சதவீத விற்பனை உயர்வை பெற்றதில் மகிழ்ச்சியில் திளைத்துள்ளது.

கொரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள மந்த நிலைக்கு நடுவில், இந்த விற்பனை வளர்ச்சி குறிப்பிட்டு கூறும்படியான விஷயம் என்று டாடா மோட்டார்ஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
அடுத்து 'பிளாக் பஸ்டர்' மாடல்களை களமிறக்கி வாடிக்கையாளர்களை குறுகிய காலத்தில் வளைத்து போட்டுள்ள கியா மோட்டார் நிறுவனமும் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையின்போது 11,640 கார்களை விற்பனை செய்துள்ளதாக கியா தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையைவிட இந்த ஆண்டு விற்பனை 224 சதவீதம் கூடுதலாகி இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








