தேசிய ஊரடங்கு... நிம்மதி பெருமூச்சு விடும் நகரங்கள்... மனிதனை தவிர அனைத்து ஜீவராசிகளும் 'ஹேப்பி'!
கொரோனா வைரஸ் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கும் இவ்வேளையில், தேசிய ஊரடங்கு உத்தரவால் பல்வேறு நன்மைகளையும் ஒருபுறம் வாரி வழங்கி இருக்கிறது.

கொரோனாவின் கோரப்பசிக்கு இரையாகமால் மக்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. குறிப்பாக, 21 நாட்கள் அறிவிக்கப்பட்டு இருக்கும் தேசிய ஊரடங்கு மூலமாக கொரோனா பரவும் வேகம் வெகுவாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவை தடுப்பதற்காக போடப்பட்ட 21 நாள் தேசிய ஊரடங்கு பெருநகரங்களில் மக்களின் வாழ்க்கையை முடக்கி விட்டாலும், மறுபுறத்தில் பல்வேறு நன்மைகளையும் வழங்கி இருக்கிறது. குறிப்பாக, தொழிற்சாலைகள் மற்றும் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கி இருப்பதால், காற்று மாசுபாடு வெகுவாக குறைந்துள்ளது.

தொழிற்சாலைகள், விமானங்கள், கப்பல் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து மற்றும் வாகனங்களின் நச்சுப் புகையால் மூச்சுத் திணறி வந்த பெருநகரங்கள் சற்று நிம்மதி பெரு மூச்சு விட்டுள்ளன. தொடர்ந்து வெளிவரும் புள்ளிவிபரங்களில் பெருநகரங்களில் காற்று மாசு 50 சதவீதம் குறைந்திருப்பதுடன், அபாயகரமான நிலையிலிருந்து சாதாரண நிலைக்கு வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு டெல்லியில் வரலாறு காணாத அளவில் காற்று மாசு அதிகரித்தது. இதனால், வாகனப் போக்குவரத்தில் கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மனிதன் வாழ இயலாத அளவுக்கு டெல்லி காற்று மாசுபாடு சென்று கொண்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் எச்சரித்தன. இருப்பினும், காற்று மாசுபாட்டை குறைக்க எடுத்த நடவடிக்கைகளுக்கு போதிய பலன் கிட்டவில்லை.

இதேபோன்று, நாட்டின் பிற முக்கிய நகரங்களான சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் காற்று மாசுபாடு என்பது அபாயகரமான நிலையை நோக்கி சென்று கொண்டிருந்தன. இந்த நிலையில், தேசிய ஊரடங்கு மூலமாக தொழிற்சாலைகள், வாகனப் போக்குவரத்து அடியோடு முடங்கி இருப்பதால் அனைத்து நகரங்களிலும் காற்று மாசுபாடு அளவு வெகுவாக குறைந்துள்ளது.

சாதாரணமாக பெருநகரங்களில் காற்று மாசுபாடு குறியீடு 100 முதல் 200 என்ற அளவில் இருக்கும். தற்போது அந்த குறியீடு 50 முதல் 100 என்ற அளவிற்கு இறங்கி இருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கினாலும், இது வரவேற்கத்தக்க விஷயமாகவே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

காற்றில் கரைந்துள்ள பி.எம் 2.5 அளவுடைய நுண்துகள்களின் அடர்த்தி தற்போது காற்றில் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், பூமி சூடாகும் பிரச்னைக்கு காரணமான நச்சு வாயுக்களின் அளவு 50 சதவீதம் வரை குறைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஐக்யூ ஏர் வெளியிட்டுள்ள ஆய்வு தரவுகளின்படி, 2019ம் ஆண்டில் உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு மிக்க நகரங்களின் பட்டியலில் 5வது இடத்தில் இருந்த டெல்லி, தற்போது 30வது இடத்திற்கு சென்றுள்ளது. மிக அபாயகரமான நிலையில் இருந்து சாதாரண நிலைக்கு வந்துள்ளது.

காற்று மாசுபாடு மட்டுமின்றி, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் ஒலி மாசு அளவும் குறைந்திருக்கிறது. தற்போது நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளிலும் ஒலி மாசு அளவு குறைந்து அமைதியான சூழல் நிலவுகிறது. இதனால், விலங்குகள், பறவைகள் மிகவும் சுதந்திரமாக இருக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








