இந்தியாவின் முதல் சிட்ரோன் கார் ஷோரூம் ரெடி... விரைவில் முதல் கார் மாடல் அறிமுகமாகிறது!
இந்தியாவின் முதல் சிட்ரோன் கார் ஷோரூம் ஆமதாபாத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய கார் ஷோரூமின் படங்கள் வெளியாகி இருக்கின்றன. படங்களுடன் முதல் சிட்ரோன் கார் அறிமுகம் குறித்த தகவல்களையும் சேர்த்தே பார்த்துவிடலாம்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ கார் குழுமம் இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்குவதற்கான ஆரம்ப கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தனது கீழ் செயல்பட்டு வரும் சிட்ரோன் பிராண்டு கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு சென்னையில் வைத்து அறிமுகம் செய்யப்பட்ட சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிதான் முதலாவது மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

இந்த நிலையில், முதல் கார் அறிமுகத்திற்கு ஏற்றவாறு, நாட்டின் முக்கிய நகரங்களில் கார் ஷோரூம்களை திறப்பதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. ஆமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள சிட்ரோன் கார் ஷோரூம் குறித்த படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதுதான் நாட்டின் முதல் சிட்ரோன் கார் ஷோரூமாக கருதப்படுகிறது.

தற்போது சிறிய அளவிலான காம்பேக்ட் ரக கார் ஷோரூம்களை அமைப்பதற்கு கார் நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இதன்மூலமாக, கார் ஷோரூம்களுக்கான முதலீடு பெருமளவு குறைகிறது. அதேநேரத்தில், மின்னணு திரை மூலமாக ஷோரூமுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கார் குறித்த விபரங்களை அளிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

பிரான்ஸ் நாட்டில் இதே போன்று லா மெய்சன் என்ற பெயரில் 150 சதுர அடி பரப்பிலான கார் ஷோரூம்களை பிஎஸ்ஏ குழுமம் நடத்தி வருகிறது. அதேபாணியில், இந்தியாவிலும் சிறிய இடத்தில் ஷோரூம்களை திறக்க பிஎஸ்ஏ முடிவு செய்துள்ளது. ஆமதாபாத் ஷோரூம் நடுத்தர வகையிலான ஷோரூம் அமைப்புடன் இருக்கிறது.

இதனிடையே, வரும் ஜூலை மாதம் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு பிஎஸ்ஏ குழுமம் திட்டமிட்டுள்ளது. இந்த மாடலானது 4,500 மிமீ நீளமும், 1,859 மிமீ அகலமும், 1,670 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல் பேஸ் 2,730 மிமீ ஆக உள்ளது. 580 லிட்டர் பூட் ரூம் இடவசதி உள்ளது.

இந்த எஸ்யூவியில் 129 எச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 178 எச்பி பவரை அளிக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் வரும் வாய்ப்புள்ளது. டீசல் மாடலானது 178 எச்பி பவரை அளிக்கும் 2.0 லிட்டர் டர்போ எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ எஞ்சின் தேர்வுகளில் வரலாம்.

இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த காரில் PHEV என்ற ஹைப்ரிட் மாடலிலும் வர இருக்கிறது. இந்த மாடலில் மின் மோட்டாரை பயன்படுத்தி மட்டும் 60 கிமீ தூரம் செல்ல முடியும். தினசரி பயன்பாட்டிற்கு சிறந்ததாக இருக்கும்.

சென்னையிலுள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் அசெம்பிள் செய்யப்படும். ஓசூரில் பிஎஸ்ஏ குழுமத்தின் எஞ்சின் ஆலை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியானது ஜீப் காம்பஸ், டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
Image Courtesy: Indian AutoMotive Owners Club/Facebook


Click it and Unblock the Notifications








