சென்னையில் தயாரான 'சூரன்'... இந்தியாவின் முதல் ஆளில்லா போர் வாகனம்!
இந்தியாவின் முதல் ஆளில்லாமல் சென்று போரிடும் தானியங்கி வாகனத்தை சென்னையை சேர்ந்த நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த வாகனத்தின் சிறப்புகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த மாதம் லக்ணோவில் நடந்த பாதுகாப்புத் துறை கண்காட்சியில் இந்த வாகனம் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அப்போதே, ராணுவத்தினரின் கவனத்தை இந்த வாகனம் பெரிதும் ஈர்த்தது. காரணம், இந்த வாகனத்தை ஆளில்லாமல் போர் முனைக்கு அனுப்பி தாக்குதல் நடத்த முடியும்.

இந்த புதிய வாகனத்திற்கு சூரன் என்று தமிழ் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த வாகனத்தை சென்னையை சேர்ந்த டிஃபென்ஸ் மாஸ்டர் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.

போர் முனையில் வீரர்களை கொண்டு செல்லாமல் இந்த வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் அல்லது தூரத்தில் இருந்து ரிமோட் கன்ட்ரோல் முறையில் இயக்க முடியும்.

ரிமோட் கன்ட்ரோல் முறையானது இதற்கான பிரத்யேக ரிமோட் கன்ட்ரோல் சாதனம் மூலமாகவும் அல்லது ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாகவும் இயக்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு இருப்பது சிறப்பு. அதாவது, ரிமோட் கன்ட்ரோல் அல்லது ஸ்மார்ட்ஃபோன் முறையில் இயக்க முடியாத போது, அதுவே தானியங்கி முறையில் செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும்.

இந்த வாகனத்தின் மேல்புறத்தில் துப்பாக்கி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த துப்பாக்கியையும் ரிமோட் கன்ட்ரோல் முறையில் துல்லியமாக இயக்க முடியும். இந்த வாகனத்தில் தொலைநோக்கு கேமராக்கள், சென்சார்கள், செயற்கை நுண்ணறிவு கருவிகள், போதுமான மின்சாரத்தை வழங்கும் பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனத்தை உருவாக்குவதற்கு ஒன்றரை ஆண்டுகாலம் பிடித்ததாக, டிஃபென்ஸ் மாஸ்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டென்னிஸ் எபினேசர் தெரிவித்துள்ளார்.

அனைத்து வித நிலபரப்புகளிலும் எளிதாக செல்வதற்கு ஏதுவான கட்டமைப்பு, டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், எதிரிகளின் தாக்குதல்களில்களை சமாளிப்பதற்கு போதுமான கவச வாகனத்திற்கு உரிய வலிமையான கட்டமைப்பையும் பெற்றிருக்கிறது.

இந்த வாகனம் வெறும் 500 கிலோ மட்டுமே எடை கொண்டுள்ளதால், போர் முனைக்கு எளிதாக கொண்டு செல்லும் வாய்ப்பை வழங்கும். இந்த வாகனம் முழுமையான தகுதியை பெறும்பட்சத்தில், போர் முனையில் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கான வாகனமாக மாறும்.
Source: FE Onilne


Click it and Unblock the Notifications








