புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை ஏலம்... முட்டி மோதிய 5,500 பேர்.. கோடியை கொட்டி வாங்க முயன்ற அருண்!
புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் முதல் யூனிட்டை வாங்குவதற்கு 5,500 பேர் முட்டி மோதி உள்ளனர். மேலும், இந்த ஏலத்தில் நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்களை மஹிந்திரா வெளியிட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி நாளை விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. வடிவமைப்பிலும், வசதிகளிலும் வேற லெவலுக்கு மாறி இருக்கிறது. நாளை விலை அறிவிப்புடன் முன்பதிவு துவங்க இருக்கும் நிலையில், இந்த புதிய தார் எஸ்யூவியை வாங்குவதற்கு வாடிக்கையாளர்களும், பிரபலங்களும் ஆயத்தமாக உள்ளனர்.

ஏற்கனவே சில பிரபலங்கள் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை வாங்குவதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக சமூக ஊடகங்கள் வாயிலாக தங்களது ஆவலை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், புதிய தலைமுறை மாடலாக வரும் முதல் தார் எஸ்யூவியை ஏலம் விட மஹிந்திரா முடிவு செய்தது. ஏலம் மூலமாக கிடைக்கும் தொகையை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு வழங்க மஹிந்திரா முடிவு செய்தது. மேலும், முதல் தார் எஸ்யூவிக்கு ரூ.25 லட்சம் அடிப்படை ஏலத் தொகையாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் இமாலய விலைக்கு முதல் தார் எஸ்யூவி ஏலம் விடப்பட்டு அசத்தி இருக்கிறது. ரூ.1.11 கோடி என்ற விலையை கொடுத்து டெல்லியை சேர்ந்த ஆகாஷ் மிண்டா முதல் தார் எஸ்யூவியை ஏலத்தில் எடுத்துள்ளார்.

இந்த நிலையில், முதல் தார் எஸ்யூவியை ஏலம் எடுப்பதற்கு நாடு முழுவதும் 550 பகுதிகளில் இருந்து 5,500 பேர் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் இருந்து சென்னை, திருநெல்வேலியை சேர்ந்தவர்கள் உள்பட சிக்மகளூர் (கர்நாடகா), எர்ணாகுளம், பதனம்திட்டா (கேரளா), கோஹிமா(நாகாலாந்து), கங்காநகர்(ராஜஸ்தான்), பாகல்பூர்(பீகார்), பிலாஸ்பூர்(சட்டீஸ்கர்) பல்லியா(உ.பி) மற்றும் டெல்லி நகரங்கள் உள்பட பல்வேறு நகரங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

மொத்தம் பங்கேற்றவர்களில் 37 பேர் ரூ.50 லட்சத்திற்கு மேல் கொடுத்து மஹிந்திரா தார் எஸ்யூவியை ஏலம் எடுக்க முயன்றுள்ளனர். இதில், டாப்-5 இடங்களில் டெல்லியை சேர்ந்த ஆகாஷ் மிண்டா, சிக்மகளூரை சேர்ந்த விஷ்வநாத், சென்னையை சேர்ந்த அருண், மெதினிபூரை சேர்ந்த அபிஷேக் தத்தா மற்றும் ராஜ்கோட்டை சேர்ந்த திவ்யாராஜ்சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில், ஆகாஷ் மிண்டா ரூ.1,11,00,000 என்ற விலையை பதிவு செய்து முதல் தார் எஸ்யூவியை ஏலத்தில் வென்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, சிக்மகளூரை சேர்ந்த விஷ்வநாத் ரூ.1,09,50,000 என்ற விலையை பதிவு செய்தார்.

சென்னையை சேர்ந்த அருண் என்பவர் ரூ.1,09,25,000 என்ற விலையை பதிவு செய்து மூன்றாவது இடத்திலும், மெதின்பூரை சேர்ந்த அபிஷேக் தத்தா ரூ.1,07,00,000 தொகையையும், ராஜ்கோட்டை சேர்ந்த திவ்யாராஜ்சிங் ரூ.98.25 லட்சத்தை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது ஏலம் விடப்பட்டுள்ள ரூ.1.11 கோடி தொகையையும், அதற்கு சரிநிகராக மேலும் ரூ.1.11 கோடியை தனது பங்களிப்பாக சேர்த்து கொடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காக வழங்க இருக்கிறது மஹிந்திரா. முதல் தார் எஸ்யூவியை வாங்க வேண்டும் என்ற ஆவல், அத்துடன் நல்ல விஷயத்திற்காக இந்த நிதி வழங்கப்படுவதால், பலரும் ஆர்வம் காட்டி இருப்பது வரவேற்கத்தக்க விஷயமாகவே பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








