எலெக்ட்ரிக் காரை களமிறக்க ஜாகுவார் லேண்ட்ரோவர் ஆயத்தம்
எலெக்ட்ரிக் காருக்கான சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க டாடா பவர் நிறுவனத்துடன் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் சொகுசு கார் நிறுவனங்கள் டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் இவ்வேளையில், எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்வதற்கான முன் திட்டப் பணிகளில் ஜாகுவார் லேண்ட்ரோவர் ஈடுபட்டுள்ளது.

இதன்படி, எலெக்ட்ரிக் காருக்கான சார்ஜர்கள் மற்றும் நிலையங்களை அமைப்பதற்காக டாடா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் டாடா பவர் நிறுவனத்துடன் ஜாகுவார் லேண்ட்ரோவர் கூட்டணி அமைத்துள்ளது.

நாட்டின் 24 நகரங்களில் செயல்பட்டு வரும் 27 ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் கார் ஷோரூம்களிலும் எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜ் ஏற்றும் நிலையங்களை டாடா பவர் நிறுவனம் அமைத்துக் கொடுக்கும்.

எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரியை சார்ஜ் ஏற்றுவதற்கான ஏசி மற்றும் டிசி சார்ஜர்களையும் டாடா பவர் சப்ளை செய்யும். இந்த சார்ஜர்கள் 7kW முதல் 50kW வரை திறன் கொண்டதாக இருக்கும்.

ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரை வாங்கும் வாடிக்கையாளர்களின் வீடுகளிலும் சார்ஜர்களை விற்பனை செய்வதற்கும், அதனை அமைத்துக் கொடுப்பதற்கான பணிகளை டாடா பவர் ஏற்க உள்ளது.

முதல்கட்டமாக டீலர்களில் ஃபாஸ்ட் சார்ஜர்களை டாடா பவர் அமைத்துக் கொடுக்கும் என தெரிகிறது. பின்னர், ஜாகுவார் லேண்ட்ரோவர் எலெக்ட்ரிக் காரை வாங்கும் வாடிக்கையாளர்களின் வீடுகளில் விருப்பத்தின் பேரில் சாதாரண மற்றும் ஃபாஸ்ட் சார்ஜர்களை டாடா பவர் அமைத்துக் கொடுக்கும். இதுதொடர்பான, சேவைகள் அனைத்தையும் டாடா பவர் ஏற்றுக் கொள்ள இருக்கிறது.

இதனிடையே, ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் இந்தியாவில் ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் காரை முதல் மின்சார மாடலாக களமிறக்க உள்ளது. இந்த ஆண்டின் பிற்பாதியில் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

இதுதவிர்த்து, பிளக் இன் ஹைப்ரிட் வகை கார்களையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான சார்ஜிங் கட்டமைப்பு சேவைகளை மேம்படுத்துவதில் டாடா பவர் உறுதுணையாக செயல்படும்.

மேலும், சொந்தமாகவே டாடா பவர் நிறுவனம் மின்சார கார்களுக்கான 120 சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், பெருந்திட்ட அலுவலக வளாகங்களில் இந்த சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைப்பதற்கும் டாடா பவர் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








