ஜீப் ரேங்லர் ரூபிகன் இரண்டாவது லாட் டெலிவிரி எப்போது? - புதிய தகவல்கள்!
ஜீப் ரேங்லர் ரூபிகன் எஸ்யூவியின் முதல் லாட் விற்று தீர்ந்த நிலையில், இரண்டாவது லாட்டிற்கான டெலிவிரி குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

விலை உயர்ந்த ஆஃப்ரோடு எஸ்யூவி கார்களில் ஜீப் ரேங்லர் இந்திய வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு முதன்முதலில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், இதுவரை 220 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ரேங்லர் ரூபிகன் எஸ்யூவி அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மாடலுக்கு ரூ.68.94 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டது.

இந்த புதிய ரேங்லர் ரூபிகன் மாடல் இந்தியர்களை சுண்டி இழுத்துள்ளது. முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து ஜீப் ரேங்லர் ரூபிகன் எஸ்யூவிகளும் விற்று தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முதல் லாட்டில் 20 யூனிட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்த எதிர்பாராத வரவேற்பை பார்த்து அசந்து போன ஜீப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஃபியட் க்றைஸ்லர் இந்தியாவுக்கான இரண்டாவது லாட் ஜீப் ரேங்லர் ரூபிகன் எஸ்யூவிகளை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. முன்பதிவு செய்து காத்திருப்பவர்களில் முன்னுரிமை அடிப்படையில் இந்த இரண்டாவது லாட்டில் வரும் ரேங்லர் ரூபிகன் எஸ்யூவிகள் டெலிவிரி கொடுக்கப்படும்.

மேலும், இந்த எஸ்யூவிகளை வரும் மே மாதம் முதல் டெலிவிரி கொடுக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இரண்டாவது லாட்டிலும் 20 யூனிட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஜீப் ரேங்லர் ரூபிகன் எஸ்யூவியில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 268 எச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்ப்டடு இருக்கிறது.

இந்த காரில் ஜீப் நிறுவனத்தின் மேம்பட்ட ராக்டிராக் என்ற ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் லோ ரேஞ்ச் கியர் ரேஷியா, டார்க் மேனேஜ்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரானிக் லாக்கிங் டிஃபரன்ஷியல் உள்ளிட்ட ஆஃப்ரோடுக்கு உதவும் தொழில்நுட்பங்களும் உள்ளன.

விசேஷமான ஆஃப்ரோடு டயர்கள் கொண்ட இந்த மாடலானது 217 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டுள்ளது. மேடான பகுதிகளிலும், பள்ளமான இடங்களிலும் அனாயசமாக இறங்கும் வகையில் இந்த எஸ்யூவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விலை உயர்ந்த ஆஃப்ரோடு பயன்பாட்டு எஸ்யூவியில் 8.4 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். வாய்ஸ் கன்ட்ரோல், க்ளைமேட் கன்ட்ரோல், நேவிகேஷன் வசதிகளும் உள்ளன.

புதிய ஜீப் ரேங்லர் ரூபிகன் எஸ்யூவி அனைத்து சாலை நிலைகளிலும் பயணிகளுக்கு முழு பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில், ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ரோல் மிட்டிகேஷன், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications








