பெங்களூர்வாசிகளே... முதல்ல பார்க்கிங் செய்ய இடம் இருக்கா?... இல்லைனா புது கார் வாங்கறது மறந்துடுங்க!
பெங்களூர் நகரில் வாகனங்கள் சாலையோரங்களில் பார்க்கிங் செய்யப்படுவதால் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை தடுப்பதற்கு அதிரடி விதிமுறையை கொண்டு வருவது குறித்து கர்நாடக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராக விளங்கும் பெங்களூர் நகரில் வாகனப் பெருக்கம் வெகுவாக அதிகரித்து விட்டது. மேலும், புதிய வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், காற்று மாசுபாடு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், பெங்களூர் நகரில் வாகனப் பெருக்கத்தால் எங்கு பார்த்தாலும் பார்க்கிங் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பிரச்னைகளும் ஏற்பட்டு வருகின்றன.

இதற்கு தீர்வு காண்பதற்காக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில், 'பார்க்கிங் விதிமுறைகள் 2.0' என்ற தலைப்பில் ஆலோசனை நடந்தது. இதில், கர்நாடக அரசின் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சாலைகளில் கார்கள் நிறுத்தப்படுவதால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதன்படி, புதிதாக கார் வாங்குவோர், அதனை நிறுத்துவதற்கு இடம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அத்தாட்சி இருந்தால் மட்டுமே அந்த காருக்கு பதிவு செய்ய அனுமதிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த முடிவு குறித்து அடுத்தக் கட்ட ஆலோசனையின்படி முடிவு எடுக்கப்படும் என்று கர்நாட அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய விதிமுறை புத்தாண்டில் புதிய கார் வாங்க திட்டமிட்டிருப்போர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், கார் விற்பனை குறைய வாய்ப்பு இருப்பதால், கார் நிறுவனங்களுக்கும், டீலர்களுக்கும் இந்த விதிமுறையால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில், சாலையோரத்தில் பார்க்கிங் செய்யப்படுவது ஓரளவு கட்டுப்படுத்துவதற்கான தீர்வாக அமையும்.


Click it and Unblock the Notifications








