பட்டைய கௌப்பும் கர்நாடக அரசு... சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகரிக்க சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா?
சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக புதிய திட்டம் ஒன்றை கர்நாடக அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு தேவையான பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம், பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு பிரச்னைக்கு தீர்வு காண முடியும். அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதியையும் குறைக்க முடியும்.

எனவே ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. பொதுவாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது மின்சார வாகனங்களின் விலை சற்று அதிகம். ஆனால் மானியம் கிடைப்பதால், மின்சார வாகனங்களை வாங்குவது மக்களுக்கு சற்று எளிதாக இருக்கும்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

ஆனால் இந்தியாவில் இன்னமும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையில் பெரும் பற்றாக்குறை காணப்படும். மின்சார வாகனங்களை வாங்கலாம் என்ற முடிவில் இருந்து மக்களை இது பின்னுக்கு இழுத்து விடுகிறது. சார்ஜிங் ஸ்டேஷன்கள் போதிய அளவிற்கு இல்லாத காரணத்தாலேயே பலர் மின்சார வாகனங்களை வாங்க தயங்குகின்றனர்.

எனவே இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட, கர்நாடக மாநில அரசு தற்போது புதிய திட்டம் ஒன்றை பரிசீலனை செய்து வருகிறது. இதன்படி மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க முன்வரும் நபர்களுக்கு, 20 சதவீதம் அல்லது 10 லட்ச ரூபாயை மானியமாக வழங்குவதற்கு கர்நாடக மாநில அரசு அதிகாரிகள் தற்போது ஆலோசித்து வருகின்றனர்.

இந்த இரண்டில் எது பெரியதோ, அது மானியமாக வழங்கப்படும். பொதுவாக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்கு, 30 லட்ச ரூபாய் முதல் 40 லட்ச ரூபாய் வரை செலவாகலாம். இது குறித்து கர்நாடக மாநில அதிகாரிகள் கூறுகையில், ''மானியம் வழங்கினால், சார்ஜிங் ஸ்டேஷன்களில் முதலீடு செய்வதற்கு பலர் முன்வருவார்கள்.

எனவே சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையில் நிலவி வரும் பற்றாக்குறை களையப்படும். மானியம் வழங்கும் இந்த திட்டத்தை, அரசின் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பவுள்ளோம்'' என்றனர். கர்நாடகாதான் கடந்த 2017ம் ஆண்டு முதல் மாநிலமாக மின்சார வாகன கொள்கையை அறிவித்தது. அப்போது கர்நாடக அரசு வெளியிட்ட அறிவிப்பு ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பெங்களூரை இந்தியாவின் மின்சார வாகன தலைநகரமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதுதான் அது. இருந்தாலும் அதன்பின்னர் சிறிய முன்னேற்றத்தை மட்டுமே கர்நாடகா அடைந்துள்ளது. குறிப்பாக பெங்களூரில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளில் பற்றாக்குறை காணப்படுகிறது.

எனவேதான் சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைக்க முன்வருபவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் குறித்து அரசு தற்போது பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஈடி ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மானியம் வழங்கும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கினால், சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்கு பலர் முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








