கர்நாடகாவில் வாகன விற்பனை தூள் கௌப்புது... அரசுக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு தெரியுமா?
கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கர்நாடகாவில் வாகன விற்பனை சிறப்பாக இருந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமலுக்கு கொண்டு வரப்பட்ட ஊரடங்கால், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கார் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை அடியோடு சரிந்தது. ஆனால் ஜூன் மாதத்திற்கு பிறகு வாகன விற்பனை மெல்ல மெல்ல உயர தொடங்கியது. குறிப்பாக கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் வாகன விற்பனை சிறப்பாக இருந்துள்ளது.

இதற்கு கர்நாடகா ஒரு உதாரணம். கர்நாடக மாநிலத்தில் மேற்கண்ட இரு மாதங்களிலும், எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கர்நாடக மாநில போக்குவரத்து துறை, கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களில், மோட்டார் வாகன வரி மூலமாக 1,042 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருந்தது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

நடப்பாண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இது சற்றே உயர்ந்துள்ளது. அதாவது 1,044 கோடி ரூபாயை கர்நாடக மாநில போக்குவரத்து துறை, மோட்டார் வாகன வரி மூலம் தற்போது வருவாயாக ஈட்டியுள்ளது. அதே சமயம் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல்-அக்டோபர் கால கட்டத்தில், மோட்டார் வாகன வரி மூலம் கர்நாடகா 3,450 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியிருந்தது.

ஆனால் நடப்பாண்டு இதே கால கட்டத்தில், 2,409 கோடி ரூபாய்தான் வருவாயாக கிடைத்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் வாகன விற்பனை அடியோடு முடங்கியதும், அதற்கு பின் வந்த மாதங்களில் வாகன விற்பனை ஓரளவிற்கு மட்டும் சிறப்பாக இருந்ததுமே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மோட்டார் வாகன வரி வருவாய் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக மாநில ஆட்டோமொபைல் துறையினர் கூறுகையில், ''முதல் முறையாக கார் வாங்கும் பலர் தற்போது ஷோரூம்களுக்கு வருகின்றனர். இவர்களில் பலர் பயணங்களுக்கு பெரும்பாலும் பொது போக்குவரத்து வாகனங்களை சார்ந்து இருந்தவர்கள். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொது போக்குவரத்தை பலர் தவிர்க்க தொடங்கியுள்ளனர்.

அதற்கு பதிலாக சொந்தமாக கார் வாங்குவதை விரும்புகின்றனர். காரில் பயணிப்பதே பாதுகாப்பானது என்பது அவர்களின் எண்ணமாக உள்ளது. இதன் காரணமாக 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட சிறிய கார்கள் தற்போது அதிகமான எண்ணிக்கையில் மிகவும் வேகமாக விற்பனையாகி வருகின்றன'' என்றனர்.

சிறிய வாகனங்கள் அதிகளவில் விற்பனையாலும், நடுத்தர மற்றும் உயர் ரக கார்களின் விற்பனை இன்னும் குறைவாகவே இருப்பதாகவும் ஆட்டோமொபைல் துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சம் மட்டுமல்லாது, தீபாவளி பண்டிகை காலமும் வாகனங்களின் விற்பனை உயர்ந்திருப்பதற்கு முக்கியமான காரணமாக உள்ளது.

அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், வாகன விற்பனையில் இம்மாதமும் இதே டிரெண்ட் நீடிக்கும் என்பதுதான் ஆட்டோமொபைல் துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கார்கள் மட்டுமல்லாது இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








