இளம் விளையாட்டு வீரருக்கு வாழ்நாள் தடை! அவர் என்ன செய்தார்னு தெரிஞ்சா நீங்களே நிச்சயம் கோபப்படுவீங்க
நட்சத்திர விளையாட்டு வீரர் ஒருவரை வாழ்நாள் முழுவதும் போட்டியில் ஈடுபடுவதற்கு எஃப்ஐஏ குழு தடை விதித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் லூகா கோர்பெரி (Luca Corberi). இவர் உலக புகழ்வாய்ந்த கார்ட் ரேசிங் விளையாட்டின் நட்சத்திர வீரர் ஆவார். கார்ட் ரேசர் பிரியர்கள் மத்தியில் இவரை அறியாதவரே இருக்க மாட்டார்கள் என கூறுமளவிற்கு பிரபலமான வீரராக அவர் இருக்கின்றனர். இவர் சமீபத்தில் செய்த முரண்பாடான செயலால் தற்போது மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இத்தாலி நாட்டின் லோனடா பகுதியில் இருக்கும் தெற்கு கர்டா கார்டிங் சர்க்யூட்டில் (South Garda Karting Circuit) கடந்த ஞாயிறன்று (04 அக்டோபர்) எஃப்ஐஏ உலக சாம்பியன்ஷிப் கார்டிங் போட்டி நடைபெற்றது. இதில், உலக நாடுகள் சிலவற்றில் இருந்து கார்ட்டிங் பந்தய வீரர்கள் பங்கேற்றனர்.

அதில் பங்கேற்ற வீரர்களில் லூகா கார்பெரி-யும் ஒருவர் ஆவார். போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த அவர், ஒன்பதாவது ரவுண்டில் சக விளையாட்டு வீரர் பவுலோ இப்போலிட்டோ (Paolo Ippolito) என்பவரின் வாகனத்தால் மோதி விபத்துக்குள்ளானார். இதனால், அவருடைய கார்டிங் வாகனம் கடுமையாக சேதமடைந்தது. மேலும் அவரால் போட்டியைத் தொடர முடியாத நிலை உருவானது.

இதனால் கடும் ஆத்திரமுற்ற லூகா, தன்னை மோதிய சக விளையாட்டு வீரர் மீது மிகுந்த கோபமடைந்தார். இதைத் தொடர்ந்து தனது கார்ட் காரில் இருந்து துண்டாகிய பம்பரைக் கையில் எடுத்துக் கொண்டு தொடர்ச்சியாக போட்டியில் ஈடுபட்டு வந்த, தன்னை மோதிய பவுலோ இப்போலிட்டோ மீது அந்த பம்பரை வீசினார்.

லூகாவின் இந்த செயல் மைதானத்தில் பங்கேற்ற பார்வையாளர்கள் அனைவரின் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, போட்டி முடிந்த பின்னர் இருவரும் வாகன நிறுத்துமிடத்திலும் மோதலில் ஈடுபட்டனர். அப்போது சக விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு மைதானத்தின் ஊழியர்கள் சிலர் இணைந்து இருவரையும் மடக்கினர். இதனால் மேலும் சர்ச்சை நீடித்தது. இந்த வீடியோக்களே தற்போது இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளன. வீடியோக்களைக் காண இங்கே க்ளிக் செய்யவும். வீடியோ 1, வீடியோ 2.

இந்த சம்பவத்தில் நட்சத்திர வீரர் லூகா மீது பெரும் சர்ச்சை வெடிக்க ஆரம்பித்தது. இதையடுத்து, எஃப்ஐஏ (FIA) கமிஷனின் சர்வதேச குழு லூகாவிடம் விசாரணை மேற்கொண்டது. இதில், குழுவிடம் அவர் அளித்த பதில் ஏற்கதக்கதாக இல்லை என கூறப்படுகின்றது. எனவே, தற்போது லூகா கோர்பரியை வாழ்நாள் முழுவதும் கார்ட் ரேஸிங்கில் ஈடுபட அந்த குழு தடை விதிக்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேசமயம், தன்னுடைய முரண்பாடான செயல்பாட்டிற்காக லூகா, தனது மன்னிப்பினை சமூக வலைதளம் வாயிலாக மற்றும் கமிஷனிடம் தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்த தகவலும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. "என்னுடைய கசப்பான செயலுக்காக மோட்டார்ஸ்போர்ட் சமூகத்திடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்" என பேஸ்புக் பதிவில் அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து, "நான் ஏன் இத்தகைய இழிவான செயலைச் செய்தேன் என்பதற்கு எந்தவிதமான காரணங்களும் இல்லை. இது எனது 15 ஆண்டுகால வாழ்க்கையில் நான் செய்யாத ஒன்று. எதிர்காலத்தில் இதுபோன்ற செயலில் மீண்டுமொரு முறை ஈடுபட மாட்டேன் என நான் நம்புகிறேன்" என்றும் கூறியிருக்கின்றார்.

இருப்பினும் கார்ட் ரேஸ் ஓட்டுவதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை, தனது செயலுக்கு கிடைத்த தண்டனையாக ஏற்றுக் கொள்வதாக லூகா கோர்பரி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இனி தனது வாழ்க்கையில் எந்தவொரு மோட்டார் பந்தயத்திலும் ஈடுபடப் போவதில்லை எனவும் அவர் கூறியிருக்கின்றார்.

23 வயதே ஆன இந்த இளம் வீரரின் செயலில் கண்டிக்கத்தக்கதாக இருந்தாலும், அவரின் வெளியேற்றம் அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறு அன்று நடைபெற்ற போட்டியில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
வாழ்நாள் முழுவதும் பந்தயத்தில் ஈடுபட தடை விதித்ததைப் போலவே லூகாவிற்கு அபராதம் வழங்கப்படுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த தகவலைத் தொடர்ந்து, எந்த மாதிரியான தண்டனையாக இருந்தாலும், தான் மனதார ஏற்றுக் கொள்வதாக இளம் போட்டியாளர் லூகா கூறியிருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








