தனியார் வாகனங்கள் இயங்க அனுமதி... விதிகளை தளர்த்திய கேரளா!
கொரோனா அரக்கன் கட்டுக்குள் வருவதையடுத்து, ஊரடங்கு உத்தரவு விதிகளில் சில தளர்வுகளை கேரளா அறிவித்துள்ளது. அதில், பெரும்பாலான மாவட்டங்களில் தனியார் வாகனங்கள் இயங்குவதற்கு நிபந்தனைகளுடன் கூடிய தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

நாட்டிலேயே முதலாவது கொரோனா பாதிப்பு கேரளாவில்தான் கண்டறியப்பட்டது. ஆனால், கேரள அரசின் சுகாதாரத் துறை கொரோனா பாதிப்பை சிறப்பான முறையில் கையாண்டு, கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கி இருப்பதால், அங்கு ஊரடங்கு விதிகளில் சில தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வர இருக்கின்றன.

இதில், முக்கியமானதாக கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் வாகனங்களில் வெளியே வருவதற்கு அனுமதிக்கப்பட இருக்கிறது. அதாவது, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள அபாயகரமான பகுதி சிவப்பு மண்டலமாகவும், அடுத்து மிதமான பாதிப்பு உள்ள பகுதிகள் ஆரஞ்ச் ஏ, ஆரஞ்ச் பி மண்டலங்களாகவும், பாதிப்பு இல்லாத பகுதி அல்லது மிர குறைவான பகுதி பச்சை என்று நான்கு மண்டலங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.

இதில், சிவப்பு மண்டலங்களில் இந்த விதி தளர்வு பொருந்தாது. குறிப்பாக, சிவப்பு மண்டலப் பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ள காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் எந்த விதி தளர்வுகளும் இருக்காது. ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும். அத்தியாவசியப் பொருட்கள் செல்வதற்காக இரண்டு பாதைகள் மட்டுமே திறக்கப்பட்டு பிற வழிகள் அனைத்தும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன.

மறுபுறத்தில் பச்சை மண்டலத்தில் உள்ள கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு விதிகள் இன்று முதல் தளர்த்தப்படுகின்றன.

கொரோனா பாதிப்பை பொறுத்து, குறிப்பிட்ட மண்டலங்களில் பொதுமக்கள் வாகனங்களில் வெளியில் வருவதற்கு அனுமதிக்கப்படும். ஆனால், மாவட்ட எல்லைக்குள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.

அதிலும், ஒற்றைப்படை பதிவு எண் கொண்ட வாகனங்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், இரட்டைப் படை பதிவு எண் கொண்ட வாகனங்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் செல்வதற்கு அனுமதிக்கப்பட உள்ளது.

சமூக இடைவெளியை கருத்தில்கொண்டு கார் உள்ளிட்ட தனிநபர் பயன்பாட்டு வாகனங்களில் ஓட்டுனர் உள்பட மூன்று பேர் செல்ல அனுமதிக்கப்படும். இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல முடியும். அதேநேரத்தில், பெண்கள் பாதுகாப்பு கருதி, இரண்டு பேர் செல்வதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முறை வைத்து வாகனங்கள் வெளியில் வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முறை மூலமாக வாகனங்களின் எண்ணிக்கையை 40 சதவீதம் குறைக்க முடியும் என்று கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், மாவட்டத்திற்குள் செல்வதற்கு மட்டுமே அனுமதி உண்டு. அவசர காரணங்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் செல்வோர் அடையாள அட்டையை காட்டி விட்டு செல்ல முடியும்.

கேரளாவில் இதுவரை 461 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில், 270 பேர் குணமடைந்துவிட்டனர். இந்த நிலையில், அங்கு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால், ஊரடங்கு விதிகளில் பல தளர்வுகளை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது சரியான முடிவு அல்ல என்று கேரள அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications








