இந்தியாவிலேயே முதல் மாநிலம்... கேரளா எப்பவுமே வேற லெவல்தான்... தூள் கிளப்பும் பினராயி விஜயன்...
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தரமான சம்பவம் ஒன்றை கேரளா செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்களால் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்துள்ளது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. எனவேதான் எலெக்ட்ரிக் வாகனங்களை மத்திய அரசு அதிகம் விரும்புகிறது.

மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யின் இறக்குமதியும் குறையும். இதன் மூலம் இந்தியாவிற்கு பொருளாதார ரீதியில் நன்மைகள் கிடைக்கும். எலெக்ட்ரிக் வாகனங்களால் கிடைக்கும் இப்படிப்பட்ட நன்மைகளை அடுக்கி கொண்டே போகலாம்.

எனவே மத்திய அரசு மட்டுமல்லாது, பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் ஆர்வமாக உள்ளன. இதில், கேரளா முதன்மையானது. கேரளாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில், அம்மாநில முதல் அமைச்சர் பினராயி விஜயன் மிகவும் தீவிரமாக இருந்து வருகிறார்.

மாநில அரசு வழங்கும் ஊக்கம் எதிரொலியால், கேரள மோட்டார் வாகன துறை தற்போது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களை ஆர்டர் செய்துள்ளது. மொத்தம் 65 கார்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. அமலாக்க பணிகளுக்கு அவை பயன்படுத்தப்படவுள்ளன. இதன் மூலமாக இத்தகைய பணிகளுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளா பெறுகிறது.

அம்மாநில அரசின் ''பாதுகாப்பான கேரளா'' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 65 டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களும், இஇஎஸ்எல் (EESL - Energy Efficiency Services Ltd.) நிறுவனத்திடம் இருந்து குத்தகைக்கு எடுக்கப்படுகின்றன. இஇஎஸ்எல் என்பது மத்திய அரசின் நிறுவனமாகும். ஆற்றல் துறை அமைச்சகத்தின் கீழ் இஇஎஸ்எல் வருகிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்கள் மொத்தம் எட்டு ஆண்டுகள் குத்தகைக்கு விடப்படுகின்றன. அத்துடன் அமலாக்க படையின் 65 அலுவலகங்களிலும், சார்ஜிங் ஸ்டேஷன்களும் கட்டமைக்கப்படவுள்ளன. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களை வைத்திருக்கும் பொது மக்கள் இந்த சார்ஜிங் ஸ்டேஷன்களை பயன்படுத்தி கொள்ள முடியுமா? என்பது தெரியவில்லை.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களுக்கு, ஊர்க்காவல் படை வீரர்களை டிரைவர்களாக நியமிக்க வாய்ப்பு உள்ளது. கேரள மோட்டார் வாகன துறையானது, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களை கொள்முதல் செய்ததும், தங்களுக்கு ஏற்ப மாடிபிகேஷன்களை செய்து கொள்வதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

இதன்படி ஸ்பீடு ரேடார் போன்ற உபகரணங்கள் இன்ஸ்டால் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நிறுவனம் நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை நடப்பாண்டு ஜனவரி மாத கடைசியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் ஆகும். இந்தியர்கள் மத்தியில் கணிசமான வரவேற்பை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பெற்றுள்ளது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார், 30.2 Kwh ஹை-கெபாசிட்டி லித்தியம் அயான் பேட்டரியை பெற்றுள்ளது. பெர்மனன்ட் மேக்னட் மோட்டாருடன் இது இணைக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 129 பிஎஸ் பவர், 245 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 312 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும்.

இது அராய் அமைப்பால் சான்று வழங்கப்பட்ட டிரைவிங் ரேஞ்ச் என்பது குறிப்பிடத்தக்கது. டிசி சார்ஜரை பயன்படுத்தினால், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை 60 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். ஆனால் ஏசி சார்ஜர் இதை செய்வதற்கு சுமார் 8 மணி நேரம் வரை எடுத்து கொள்ளும்.

இந்தியாவில் தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான், எம்ஜி இஸட்எஸ், ஹூண்டாய் கோனா என ஒரு சில எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கின்றன. இவை மூன்றுமே எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வரும் காலங்களில் அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








