இந்திய வாடிக்கையாளர்கள் நலனில் அதிக அக்கறை காட்டும் தென்கொரிய நிறுவனம்... நன்றி மறவாத கியா!
தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசிடம் இருந்து தனது வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கும் விதமாக கிய நிறுவனம், புதிய கேர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தென் கொரியாவைச் சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனமான கியா, கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்தியாவில் முதல் முறையாக கால் தடம் பதித்தது. இதன் வருகையையொட்டி, அந்நிறுவனத்தின் உலக புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றான கியா செல்டோஸ் எஸ்யூவி கார் களமிறக்கப்பட்டது. இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பை கருத்தில் கொண்டை இக்காரை அந்நிறுவனம் களமிறக்கியது.

அதுமட்டுமின்றி, இந்தியர்களின் மன நிலையை அறிந்த கியா, நம்மவர்களின் (இந்தியர்கள்) எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக செல்டோஸ் எஸ்யூவி காரை அறிமுகம் செய்தது. அதுவும், அடக்கமான விலையில். இந்த காருக்கு ரூ. 9.89 லட்சம் முதல் ரூ. 17.34 லட்சம் வரை அது நிர்ணயித்துள்ளது.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

இந்த விலை கவர்ச்சிகரமானதாக இருந்ததால் இந்தியர்கள் செல்டோஸ் காருக்கு ஏகபோகமான வரவேற்பை அளிக்க ஆரம்பித்தனர். கியா, ஓர் புது முக நிறுவனமாக இருந்தாலும் பாகுபாடின்றி இமாலயளவிலான வரவேற்பை வழங்கினர். இதனால், கியா நிறுவனமே திகைத்து நின்றது. கியா மட்டுமில்லாமல் போட்டி வாகன உற்பத்தி நிறுவனங்கள் பலவும் இந்த வரவேற்பைக் கண்டு வியந்தன.

இத்தகைய வரவேற்பிற்கு விலை மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. ஏனென்றால், செல்டோஸ் எஸ்யூவி காரில் வழங்கப்பட்டிருந்த சிறப்பு பிரிமியம் வசதிகள் ஈர்ப்பின் உச்சமாக இருந்ததும் ஓர் முக்கிய காரணமாக உள்ளது.

இத்தகைய வரவேற்பை வழங்கிய இந்தியர்களுக்கு, கியா நிறுவனம் தற்போது நன்றி மறவாமல் உதவிகளை வழங்க ஆரம்பித்துள்ளது. ஆம், கொரோனா வைரசால் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில், அந்த வைரசின் தொற்றில் இருந்து தங்களது வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் கியா களமிறங்கியுள்ளது.

இதற்காக பிரத்யேகமாக 'கியா கேர்' எனும் திட்டத்தையும் அது அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம், அதன் செல்டோஸ் எஸ்யூவி மற்றும் கார்னிவல் எம்பிவி ஆகிய கார்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு சேவை வழங்க இருப்பதாக அது தெரிவித்துள்ளது. கியா நிறுவனத்தின் இந்தியாவிற்கான இரண்டாவது மாடல்தான் கார்னிவல் எம்பிவி என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த கேர் திட்டத்தின் மூலம் உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் சுகாதார அனுபவத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக கியா தெரிவித்துள்ளது. விற்பனைக்கு பின்னரும் சேவையை வழங்கும் விதமாக தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தில், மூன்று படி நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவையனைத்தும் அதன் வாடிக்கையாளரை எந்த சூழ்நிலையிலும் வைரசால் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க உதவும் என நம்பப்படுகின்றது.

அவை:
படி நிலை 1 - வாகன சுகாதாரம்
இந்த நிலை, வாகனத்தின் வெளிப்புறத்தை தூய்மையாக மற்றும் கிருமிகள் அண்டாத வகையில் கவனித்துக் கொள்ள உதவுகின்றது. வெளிப்புறம் மட்டுமின்றி உட்புற தூய்மைப் பணியும் இந்த படிநிலையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. அதாவது, அதிகமாக நாம் தொட்டு பயன்படுத்தும் அல்லது பிறர் தொடும் இடங்களுக்கு கூடுதல் கவனம் கொடுக்கப்பட்டு தூய்மைச் செய்யப்பட உள்ளது.

இதனால், ஒருவரிடம் படர்ந்த கிருமி, வைரஸ், பாக்டீரியா உள்ளிட்டவை மற்றவருக்கு பரவுவது தவிர்க்கப்படும். இதற்காக நேட்சுரல் கெமிக்கல் மற்றும் ஆண்டி பேக்டீரியல் உள்ளிட்ட மருந்து வகைகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இவை, காரின் உட்பகுதியில் உள்ள கிருமிகளை நாசம் செய்வதுடன், புத்துணர்வான நறுமணத்தை வழங்கவும் உதவும். இந்த முதல் நிலை செயல்பாட்டை அனைத்து டீலர் சர்வீஸ் சென்டர்களும் இரு வாரங்களுக்கு செய்யவிருக்கின்றன.

படி நிலை 2 - அனைவருக்கும் பரிசோதனை
இந்த நிலையில் கியா நிறுவனம், அதன் சேவை மையம், டீலர் ஷோரூம் மற்றும் சர்வீஸ் மையங்களுக்கு வருகை புரியும் வாடிக்கையாளர்களை தனித்துவமாக பரிசோதனைச் செய்ய இருக்கின்றது. அதாவது, வருகை தரும் ஒவ்வொருவரையும் காய்ச்சல் அறிகுறி பரிசோதனைக்கு உட்படுத்த இருப்பதாக கியா தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, அவர்களுக்கு கிருமி நாசினி போன்றவையும் இதில் வழங்கப்பட உள்ளது. இதனை, வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி அதன் பணியாளர்களுக்கும் மேற்கொள்ள இருக்கின்றது கியா.

படி நிலை 3 - வாடிக்கையாளரின் பாதுகாப்பு/உடல் நலம்
கியா அறிவித்துள்ள திட்டங்களிலேயே கடைசி இந்த நிலைதான் அனைவரையும் கவரவிருக்கின்றது. ஆம், தற்போது தடையுத்தரவு நிலவி வருவதால் மக்கள் வெளியில் நடமாட தடைவிதிக்கப்பட்ட நிலை நீடித்து வருகின்றது. இதை கருத்தில் எடுத்துக் கொண்ட கியா, கியா லிங்க் ஆப் (Kia Link App) என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்கான சர்வீஸை புக் செய்து கொள்ள முடியும்.

இதைத் தொடர்ந்து, மொபைல் ஒர்க் ஷாப் வீடு தேடி வந்து காரை நேரடித் தொடர்பின்றி சர்வீஸ் செய்து வழங்கும். இந்த சர்வீஸ் திட்டத்தில் பணியாளரின் உடல் துளியளவும் காரின் மீது படாது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த சேவையை கியா நிறுவனம் இலவசமாகவே வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வரும் இரு மாதங்கள் வரை இந்த சேவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, முன்னதாக சர்வீஸ், வாரண்டி தகவல் மற்றும் அறிவிப்புகளை எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பி வந்த கியா தற்போது அதே குறுஞ்செய்தி வாயிலாக கோவிட்-19 குறித்த எச்சரிக்கைகளையும் வழங்கி வருகின்றது. இதுமட்டுமின்றி சுகாதார நடவடிக்கைகள் பற்றிய அறிவுரையையும் அது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது.

மேற்கூறிய சேவைகள் அனைத்தையும் கியா நிறுவனம், தற்போது நாடு முழுவதும் இயக்கி வரும் 192 டச் பாயிண்டுகள் மூலம், அதன் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கின்றது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருதி இத்திட்டத்தை அது செயல்பாட்டுக்குக் கொண்டுவந்திருக்கின்றது. கியாவின் இந்த விற்பனைக்கு பிந்தைய சேவை அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








