கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவிகரம் நீட்டியது கியா மோட்டார்!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக உதவிக்கரம் நீட்டி உள்ளது கியா மோட்டார் நிறுவனம். இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு வாகன நிறுவனங்கள் பெரிய அளவிலான உதவிகளை செய்யத் துவங்கி இருக்கின்றன. மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. பெருமளவு நிதி உதவிகளை வழங்குவது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு இருப்பதுடன், மருத்துவ உபகரணங்களை தயாரிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில், தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. அதன்படி, ஆந்திர மாநில முதல்வரின் நிவாரண நிதிக்காக ரூ.2 கோடியை வழங்கி இருக்கிறது.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ரூ.2 கோடிக்கான காசோலையை கியா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கூகின் ஷிம் நேரில் சந்தித்து வழங்கினார்.

மருத்துவ உபகரணங்கள் வாங்குவது உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்த நிதி உதவி பயன்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தனது வாடிக்கையாளர்களுக்கு தேவையான பல உதவித் திட்டங்களையும் அறிவித்துள்ளது. அதன்படி, இலவச சர்வீஸ் திட்டத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கான கூடுதல் கால அவகாசத்தை வழங்கி இருக்கிறது.

தனது கார் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் உதவிகளை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளிலும் கியா மோட்டார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

மேலும், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு மற்றும் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கியா மோட்டார் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, கியா மோட்டார் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக செயல்படும் ஹூண்டாய் மோட்டார்ஸ் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. முக கவசங்களை இறக்குமதி செய்து மருத்துவப் பணியாளர்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








