7 புதிய எலெக்ட்ரிக் கார்களுடன் அதிரடி காட்டத் தயாராகும் கியா மோட்டார்!
எதிர்கால சந்தையை மனதில் வைத்து, 7 புதிய எலெக்ட்ரிக் கார்களை உலக அளவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது கியா மோட்டார் நிறுவனம்.

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. அந்நிறுவனம் உலக அளவில் இதுவரை ஒரு லட்சம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த நிலையில், நடப்பு தசாப்தமானது மின்சார வாகனங்களை நோக்கி நகரத் துவங்கி இருக்கிறது.

இதற்கு தக்கவாறு வர்த்தகத்தை கொண்டு செல்ல ஏதுவாக பேட்டரியில் இயங்கும் 7 புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக கியா மோட்டார் அறிவித்துள்ளது. தென்கொரியாவில் வாசங் பகுதியில் உள்ள கியா மோட்டார் ஆலையில் நடந்த நிகழ்ச்சியில், அந்நிறுவனத்தின் தலைவர் ஹோ சங் சோங் கலந்து கொண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது, உலக அளவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் 7 புதிய மின்சார கார்களின் மாதிரிப் படத்தையும் வெளியிட்டார். அதில், 7 கார்களில் பெரும்பாலானவை எஸ்யூவி அல்லது க்ராஸ்ஓவர் மாடல்களாக வர இருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, எஸ்யூவி அல்லது க்ராஸ்ஓவர் ரக மாடல்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் இருப்பதால், கியா மோட்டார் நிறுவனம் எலெக்ட்ரிக் எஸ்யூவி அல்லது க்ராஸ்ஓவர் ரக மாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இதுவரை வந்த மாடல்கள் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பெட்ரோல், டீசல் கார்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மின்சார கார் மாடல்களாக இருந்தன. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாடல்கள் முற்றிலும் புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்படும் என்று தெரிகிறது.

அடுத்த ஆண்டு முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை கியா மோட்டார் நிறுவனம் கொண்டு வர உள்ளதாக கியா தெரிவித்துள்ளது. வரும் 2027ம் ஆண்டுக்குள் அனைத்து புதிய எலெக்ட்ரிக் கார்களும் சந்தைக்கு கொண்டு வரப்படும். வரும் 2025ம் ஆண்டுக்குள் தற்போது உள்ள மாடல்கள் மற்றும் புதிய மாடல்களை சேர்த்து 11 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது.

மேலும், 2029ம் ஆண்டில் உலக அளவில் தனது மொத்த கார் விற்பனையில் 25 சதவீதம் அளவுக்கு மின்சார கார்களை விற்பனை செய்வதை இலக்காக கொண்டு செயல்பட இருப்பதாகவும் கியா மோட்டார் தெரிவித்துள்ளது.

கியா மோட்டார் நிறுவனத்தின் புதிய மின்சார கார் கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்படும் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார் Kia CV என்ற பெயரில் உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதற்கு தக்கவாறு, ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை நிறுவும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது கியா மோட்டார் நிறுவனம்.


Click it and Unblock the Notifications








