எர்டிகா ரகத்தில் புதிய 7 சீட்டர் எம்பிவி கார்... மாருதி வயிற்றியில் புளியை கரைத்த கியா மோட்டார்!
புத்தம் புதிய 7 சீட்டர் எம்பிவி கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக கியா மோட்டார் தெரிவித்துள்ளது. மாருதி எர்டிகா காருக்கு நேர் போட்டியாக வர இருக்கும் இந்த புதிய கார் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு செல்டோஸ் எஸ்யூவி காருடன் இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்கியது. செல்டோஸ் காருக்கு மிகப்பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத கியா மோட்டார் நிறுவனம் அடுத்தடுத்து, இந்தியாவில் புதிய கார் மாடல்களை வரிசை கட்ட உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து கியா கார்னிவல் பிரிமீயம் எம்பிவி கார் மாடலை விற்பனைக்கு கொண்டு வந்தது. அடுத்ததாக, கியா சொனெட் என்ற காம்பேக்ட் எஸ்யூவி காரை தீபாவளி பண்டிகையின்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த சூழலில், அடுத்து ஒரு 7 சீட்டர் எம்பிவி கார் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதை கியா மோட்டார் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. இதுபற்றி கியா மோட்டார் தலைமை செயல் அதிகாிர ஹன் வூ பார்க் ஆட்டோகார் இந்தியா தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது," இந்திய சொகுசு எம்பிவி கார் மார்க்கெட்டில் கார்னிவல் எம்பிவி கார் மாடலை நிலைநிறுத்தி உள்ளோம்.

கார்னிவல் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, மற்றொரு எம்பிவி கார் மாடலை களமிறக்குவது குறித்தும் யோசித்து வருகிறோம். எஸ்யூவி மற்றும் எம்பிவி கார் மார்க்கெட்டில் கியா மோட்டார் மிக வலிமையான போட்டியாளராக இருந்து வருகிறது. எனவே, அடுத்து ஒரு புதிய எம்பிவி கார் மாடலை இந்தியாவில் களமிறக்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

புதிய எம்பிவி கார் மாடலானது கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் கட்டமைப்பு கொள்கையிலேயே உருவாக்கப்படும். அதேநேரத்தில், பரிமாணத்தில் செல்டோஸ் எஸ்யூவியைவிட சற்று பெரிய கார் மாடலாக இந்த எம்பிவி கார் மாடல் இருக்கும்.

அடுத்த ஆண்டு பிற்பாதியில் கியா நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

கடந்த ஆண்டு மாருதி கார் நிறுவனம் மிக சோதனையான காலக்கட்டத்தில் கூட எர்டிகா காரின் விற்பனை சிறப்பாக இருந்தது. கடந்த ஆண்டு 93,000 எர்டிகா கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு விதிகளால் மாருதி எர்டிகா காரில் டீசல் மாடல் விலக்கிக் கொள்ளப்பட இருக்கிறது.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, பெட்ரோல், டீசல் மாடல்களில் தனது புதிய எம்பிவி கார் மாடலை கொண்டு வருவதற்கு கியா மோட்டார் திட்டமிட்டுள்ளது. செல்டோஸ் காரில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளுடன் இந்த எம்பிவி கார் கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications








