இதற்கு முன்பு வேறு எந்த நிறுவனமும் செய்யாத சாதனை... போட்டியாளர்களை விழி பிதுங்க வைத்த கியா...
கியா நிறுவனம் பிரம்மாண்ட சாதனை ஒன்றை செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், தங்களது முதல் தயாரிப்பை அறிமுகம் செய்ததில் இருந்து, வெறும் 1 ஆண்டுக்கு உள்ளாகவே 1 லட்சம் கார்கள் விற்பனை என்ற இலக்கை கடந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் வெகு வேகமாக 1 லட்சம் கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை எட்டிய நிறுவனம் என்னும் பெருமையை கியா பெற்றுள்ளது.

இந்தியாவில் இதற்கு முன்பாக வேறு எந்த நிறுவனமும் இவ்வளவு வேகமாக 1 லட்சம் கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை எட்டியது கிடையாது. இந்தியாவில் முதல் காரின் விற்பனையை தொடங்கிய 11 மாதங்களில் கியா நிறுவனம் இந்த சாதனையை படைத்துள்ளது. இந்த இமாலய சாதனையை படைத்ததற்கு, கியா நிறுவனம் செல்டோஸ் காருக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

இந்தியாவில் செல்டோஸ் காரின் விற்பனை அமர்க்களப்படுத்திய காரணத்தால்தான், கியா நிறுவனத்தால் இந்த சாதனையை படைக்க முடிந்துள்ளது. இந்தியாவில் செல்டோஸ் கார் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய முதல் கார் செல்டோஸ்தான்.

விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இரண்டே மாதங்களில், இந்த செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் என்ற மகுடத்தை கியா செல்டோஸ் சூடியது. அத்துடன் இந்தியாவின் டாப்-5 கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக கியா நிறுவனம் உருவெடுக்கவும் செல்டோஸ் உதவியது. கியா நிறுவனம் தற்போதைய நிலையில் வெறும் 2 கார்களை மட்டும்தான் விற்பனை செய்து வருகிறது.

ஒன்று செல்டோஸ். மற்றொன்று கார்னிவல். இரண்டே இரண்டு தயாரிப்புகளை வைத்து கொண்டு, வெறும் 11 மாதங்களில், 1 லட்சம் கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை எட்டுவது என்பது உண்மையில் அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. இந்தியாவில் கியா நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ள 1 லட்சம் கார்களில், 97,745 யூனிட்கள் செல்டோஸ் ஆகும்.

அதே சமயம் விற்பனை செய்யப்பட்ட கார்னிவல் கார்களின் எண்ணிக்கை 3,614 ஆகும். கியா நிறுவனத்தின் செல்டோஸ் மற்றும் கார்னிவல் ஆகிய இரண்டு கார்களின் தோற்றமும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கிறது. கார்களை அட்டகாசமாக டிசைன் செய்வதில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இருக்கும் நிபுணத்துவம், இந்தியாவில் அதன் பிரம்மாண்ட தொடக்கத்திற்கு முக்கியமான காரணம்.

இதுதவிர கார்களில் வசதிகளை அள்ளி கொடுப்பதிலும் கியா நிறுவனம் தலை சிறந்து விளங்குகிறது. இதன் மூலம் இந்தியாவில் வரும் காலங்களில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக தென்படுகின்றன. தற்போது இரண்டு கார்கள் மட்டுமே விற்பனையில் உள்ள நிலையில், மூன்றாவது தயாரிப்பை களமிறக்க கியா தயாராகி வருகிறது.

கியா சொனெட் என்ற பெயரில் இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளது. இது காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். வரும் செப்டம்பர் மாதத்தில் கியா சொனெட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதால், செல்டோஸ் மற்றும் கார்னிவல் கார்களின் வரிசையில் கியா சொனெட் காரும் பிரம்மாண்ட வெற்றியை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








