எக்கச்சக்க டிமான்ட்... இந்தியாவில் 2வது கார் ஆலை அமைக்க கியா அதிரடி திட்டம்!
எதிர்கால தேவையை மனதில் வைத்து, இந்தியாவில் இரண்டாவது கார் ஆலையை அமைப்பது குறித்து கியா மோட்டார் நிறுவனம் பரிசீலித்து வருகிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கிய கியா மோட்டார் முதல் மாடலாக செல்டோஸ் எஸ்யூவியை களம் இறக்கியது. இந்தியாவில் செல்டோஸ் எஸ்யூவிக்கு எகிடுதகிடான வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும், எஸ்யூவி மார்க்கெட்டில் கோலோய்ச்சி வந்த தனது பங்காளி ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியை கூட பின்தங்க வைத்துவிட்டது. வசீகரமான டிசைன், தொழில்நுட்ப வசதிகள், வசதிக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளும் வகையில் எஞ்சின் தேர்வுகள் என மதிப்புவாய்ந்த மாடலாக மாறி இருக்கிறது.

இந்த சூழலில், அடுத்து அறிமுகம் செய்யப்பட்ட கார்னிவல் எம்பிவி காருக்கும் இந்தியாவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 10,000க்கும் அதிகமான முன்பதிவுகளை கார்னிவல் எம்பிவி கார் பெற்றிருப்பதுடன், 3,000க்கும் மேற்பட்ட கார்னிவல் கார்கள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.

இந்த சூழலில், அடுத்து சொனெட் என்ற காம்பேக்ட் எஸ்யூவி காரை கியா மோட்டார் நிறுவனம் களமிறக்க உள்ளது. இந்த புதிய மாடலானது மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ கார் சந்தையை குறிவைத்து களமிறக்கப்பட உள்ளது.

செல்டோஸ், கார்னிவல் கார்களை அடுத்து கியா மோட்டார் நிறுவனத்தின் குறைவான விலை மாடலாக இருப்பதால், சொனெட் எஸ்யூவியும் பெரும் ஆவலைத் தூண்டி இருக்கிறது. ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் சொனெட் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தனது கார்களுக்கு அதிக டிமான்ட் இருப்பதை மனதில் வைத்து புதிய திட்டத்தை கியா மோட்டார் கையில் எடுத்துள்ளது. இதன்படி, இந்தியாவில் இரண்டாவது கார் ஆலையை அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ஒரு புதிய காரை அறிமுகப்படுத்தவும் கியா மோட்டார் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், சொனெட் எஸ்யூவி வரை உற்பத்தி திறனில் நெருக்கடி இருக்காது. தற்போது ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் உள்ள ஆலையானது ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

எனினும், உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதியை தீவிரப்படுத்தும்போது இந்த ஆலை உற்பத்தித் திறன் போதுமானதாக இருக்காது என்று கியா கருதுகிறது, சொனெட் எஸ்யூவிக்கு பிறகு வரும் புதிய கார் மாடல்களுக்கு அதிக டிமான்ட் இருந்தால் அதனை சமாளிப்பது கடினம்.

இதன் காரணமாக, இந்தியாவில் இரண்டாவது கார் ஆலை அமைக்கும் முடிவை கையில் எடுத்துள்ளது கியா மோட்டார். புதிய ஆலையை மஹாராஷ்டிர மாநிலத்தில் அமைப்பது குறித்தும் அந்நிறுவனம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








