சபாஷ்... தங்கு தடையில்லாமல் புதிய கார்களை டெலிவிரி கொடுக்க கியா எடுத்த துணிச்சலான முடிவு!
கொரோனா பிரச்னை ஒரு புறம் இருந்து வரும், இந்தியர்களுக்கு தங்கு தடையில்லாமல் தனது புதிய கார்களை டெலிவிரி கொடுப்பதற்காக துணிச்சலான முடிவு ஒன்றை கியா மோட்டார் நிறுவனம் எடுத்துள்ளது.

ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் தென்கொரியாவை கியா மோட்டார் நிறுவனம் இந்திய கார் வாடிக்கையாளர்களின் மனதில் வெகு சீக்கிரத்தில் இடம்பிடித்து சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டது.

அந்நிறுவனத்தின் முதல் கார் மாடலாக வந்த செல்டோஸ் எஸ்யூவிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதுடன் இந்தியாவின் சூப்பர் ஹிட் மாடலாக மாறி இருக்கிறது. இதைத்தொடர்ந்து கார்னிவல் என்ற பிரிமீயம் எம்பிவி கார் மாடலையும் கொண்டு வந்தது.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

கியா கார்னிவல் எம்பிவி காருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த உற்சாகத்துடன் அடுத்த சில மாதங்களில் மூன்றாவது மாடலாக சொனெட் என்ற காம்பேக்ட் எஸ்யூவி மாடலை இந்தியாவில் களமிறக்க உள்ளது. செல்டோஸ் காரைவிடை விலை குறைவான தேர்வாக இருக்கும் என்பதால், இப்போதே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அடுத்து எர்டிகா காருக்கு போட்டியாக புதிய எம்பிவி கார் மாடலையும் கொண்டு வருவதற்கான திட்டத்தை கையில் வைத்துள்ளது கியா மோட்டார். இந்த நிலையில், கியா கார்கள் மீதான ஈர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், அந்நிறுவனத்தின் செல்டோஸ், கார்னிவல் காருக்கு காத்திருப்பு காலம் அதிகரித்து வருகிறது.

கியா நிறுவனத்தின் கார் ஆலை ஆந்திர மாநிலம், அனந்த்பூரில் அமைந்துள்ளது. கொரோனா பிரச்னை காரணமாக, கார் உற்பத்திப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அண்மையில்தான் மீண்டும் துவங்கி இருக்கிறது. மேலும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்படுவதால், உற்பத்தி முழு அளவில் நடக்கவில்லை.

கார் உற்பத்தி முழு அளவை எடுத்துவதற்கு ஓரிரு மாதங்கள் ஆகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், செல்டோஸ், கார்னிவல் கார்களுக்கான காத்திருப்பு காலம் அதிகரிக்கும். அத்துடன், அடுத்த சில மாதங்களில் சந்தைக்கு கொண்டு வரப்பட இருக்கும் சொனெட் எஸ்யூவியின் உற்பத்தியும் சேர்ந்தால், பல மாதங்கள் காத்திருப்பு காலம் நீளும் நிலை ஏற்படும்.

இதனை மனதில் வைத்து, அனந்த்பூர் ஆலையின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு கியா மோட்டார் திட்டமிட்டுள்ளது. கொரோனாவால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், பல கார் நிறுவனங்கள் புதிய முதலீட்டுத் திட்டங்களை ஒத்திப்போட்டு வருகின்றன.

ஆனால், கியா மோட்டார் நிறுவனம் துணிச்சலாக ஆலை விரிவாக்கத் திட்டத்தை கையில் எடுத்து முதலீடு செய்ய இருக்கிறது. தற்போது கியா கார் நிறுவனத்தின் அனந்த்பூர் ஆலையில் ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும்.

இதனை மேலும் அதிகரிக்கும் விதமாக, அனந்த்பூர் ஆலையில் ரூ.400 கோடி அளவுக்கு புதிதாக முதலீடு செய்ய இருப்பதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கியா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த புதிய முதலீடு மூலமாக நூற்றுக்கணக்கானோருக்கு நேரடியாகவும், மறைமுறைகமாகவும் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே, 2,400 பேருக்கு கியா மோட்டார் நிறுவனம் பயிற்சி அளித்திருப்பதுடன், அதில் 1,589 பேர் கியா நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். உதிரிபாகங்கள் சப்ளையர்கள் மூலமாக 14,000 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








